ஒரு ஆலமரத்தின் வரலாறு- கமல், ரஜினி, சிரஞ்சீவி, நாசர், பிரகாஷ்ராஜ், பூர்ணம் விஸ்வநாதன், சரத்பாபு, சார்லி, விவேக், எஸ்.பி.பி, ஸ்ரீதேவி, ஜெயப்பிரதா, சரிதா, சுஜாதா, ஸ்ரீப்ரியா, ஜெயசுதா, ஜெயசித்ரா, கீதா, ஸ்ரீவித்யா, சுமித்ரா, ஜெயந்தி, மதுபாலா, ரம்யாகிருஷ்ணன்! (யப்பா மூச்சு வாங்குது)
தஞ்சை மாவட்டம் நன்னிலம் – நல்லமாங்குடி அக்ரஹாரத்தில் 9, ஜுலை 1930ல் பிறந்தார். 84 வயது கே.பி.யின் கலையுலகப் பொது வாழ்வு அங்கே சிறு வயதில் திண்ணை நாடகங்களில்தான் ஆரம்பம்! சென்னை ஏ.ஜி. ஆபீஸில் 12 ஆண்டுகள் பணிபுரிந்துகொண்டே, நாடகங்கள் நடத்தி வந்தார். ‘மேஜர் சந்திரகாந்த்’ மிகப் பிரபலமான நாடகம். ‘எதிர் நீச்சல்’, ‘நாணல்’, ‘விநோத ஒப்பந்தம்’ போன்றவை மிகுந்த வரவேற்பைப் பெற்ற நாடகங்கள்!
கமல், ரஜினி, சிரஞ்சீவி, நாசர், பிரகாஷ்ராஜ், பூர்ணம் விஸ்வநாதன், சரத்பாபு, சார்லி, விவேக், எஸ்.பி.பி. என இவர் அறிமுகப்படுத்திய நடிகர்கள் ஏராளம். இதுவரை 101 படங்கள் இயக்கி இருக்கிறார். முதல் படம், ‘நீர்க்குமிழி’. ‘பொய்’ வரை பட்டியல் நீள்கிறது!
தேசிய விருது, மாநில விருது, பத்மஸ்ரீ, அண்ணா விருது, கலைஞர் விருது, கலைமாமணி, ஃபிலிம்பேர், பல்கலைக்கழகங்களின் டாக்டர் பட்டங்கள் என ஏராளமான அங்கீகரிப்புகள் பாலசந்தருக்கு உண்டு! மனைவியின் பெயர் ராஜம். கவிதாலயா தயாரிப்புப் பணியில் இருக்கிற புஷ்பா கந்தசாமி, கைலாசம், பிரசன்னா என மூன்று குழந்தைகள். பி.எஸ்சி., முடித்துவிட்டு முத்துப்பேட்டையில் ஓர் ஆண்டு பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து இருக்கிறார். ‘தென்றல் தாலாட்டிய காலம்’ என அதை ஆசையாகக் குறிப்பிடுவார்! தோட்டக் கலையில் ஆர்வம். யார் உதவியையும் எதிர்பார்க்காமல், வீட்டையும் தோட்டத்தையும் தானே பெருக்கிச் சுத்தமாக வைத்துக்கொள்ள விரும்புவார்!
ஸ்ரீதேவி, ஜெயப்பிரதா, சரிதா, சுஜாதா, ஸ்ரீப்ரியா, ஜெயசுதா, ஜெயசித்ரா, கீதா, ஸ்ரீவித்யா, சுமித்ரா, ஜெயந்தி, மதுபாலா, ரம்யாகிருஷ்ணன் என பாலசந்தர் அறிமுகப்படுத்திய கதாநாயகிகளின் பட்டியல் இன்னும் நீளம்! எம்.ஜி.ஆரின் ‘தெய்வத்தாய்’ படத்துக்கு வசனம் எழுதியிருக்கிறார். சிவாஜியை வைத்து ‘எதிரொலி’ என ஒரே ஒரு படம் இயக்கியிருக்கிறார். அடுத்து, இவரே ஹிட் ஹீரோக்களை உருவாக்கியது வரலாறு! மலையருவியும், கடற்கரையும் பாலசந்தரின் படங்களில் நிச்சயம் இடம்பெறும். ‘அச்சமில்லை அச்சமில்லை’ படத்தில் நடிகர்களின் பெயர்ப் பட்டியலில் மலையருவியின் பெயரையும் சேர்த்தவர்! விநாயகர்தான் இஷ்ட தெய்வம். பள்ளி நாட்களில் தெரு முனையில் இருந்த விநாயகர் கோயிலுக்கு அர்ச்சகராக இருந்த அனுபவமும் உண்டு. வீட்டுக்குப் பெயர்கூட ‘விநாயகா’!
பாலசந்தரின் தந்தை 18 ரூபாய் சம்பளத்தில் கிராம அதிகாரியாக இருந்து, இவரை கல்லூரி வரை படிக்கவைத்தார். கலெக்டர் ஆக்க வேண்டும் என்பது அவரது அப்பாவின் கனவு. 1972 மார்ச் 10ஆம் தேதி வரை செயின் ஸ்மோக்கர். மார்ச் 11ஆம் தேதி சிறு மாரடைப்பு வர, புகைப் பழக்கத்துக்கு விடை கொடுத்தார்! கவிதாலயா என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி 56 படங்கள் தயாரித்து இருக்கிறார். ரஜினியில் ஆரம்பித்து, ஜீவன் வரைக்கும் அவர் தயாரிப்பில் நடிக்காதவர்களை எண்ணிவிடலாம்! தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் படங்கள் இயக்கி இருக்கிறார்.
‘ஏக் துஜே கேலியே’ மூலம் கமல் ஹிந்திக்குப் போனார். எஸ்.பி.பி. பாடிய ‘தேரே மேரே பீச் மே’ இன்றைக்கு வரைக்கும் ஆல் டைம் ஹிட்! பாலசந்தரை மானசீகமாக மிகவும் பாதித்த நடிகர் எம்.ஆர்.ராதா. நாடகங்களில் அவரது அநாயாசமான நடிப்பை எப்பவும் சிலாகிப்பார்! பேரறிஞர் அண்ணாவை பாலசந்தருக்குப் பிடிக்கும். ‘இரு கோடுகள்’ படத்தில் அவரைக் காட்டுவதற்குப் பதிலாக, அவரது குரலை வைத்து படமாக்கிய காட்சி வெகுவாக ரசிக்கப்பட்டது! சீரியல்களில் சின்னதாக முகம் காட்டிய பாலசந்தர், டைரக்டர் தாமிராவின் ‘ரெட்டச் சுழியில்’ நண்பர் பாரதிராஜாவுடன் இணைந்து முக்கிய வேடத்தில் நடித்தார்!
இன்னமும் சினிமாதான் உலகம். சினிமா பார்ப்பதும், படிப்பதும், திரையுலகம் சம்பந்தப்பட்டவர்களைச் சந்திக்கவும்தான் விரும்புவார். படங்கள் பார்த்து, அவை மனதைப் பாதித்துவிட்டால், உடனே அந்த இயக்குநருக்கு நீண்ட பாராட்டுக் கடிதம் எழுதுவார். நேரிலும் சந்தித்துப் பேசி தட்டிக்கொடுப்பார். ’16 வயதினிலே’ பார்த்துவிட்டு பாரதிராஜாவின் காலில் விழுவேன் என பாலசந்தர் பேசிவிட, பதறிவிட்டார் பாரதிராஜா! படப்பிடிப்பு இருந்தால் காலை நாலரை மணிக்கே எழுந்துவிடுவார். இல்லாவிட்டால் ஆறு மணி. ஒரே ஒரு தடவை பெப்ஸி தலைவராக இருந்திருக்கிறார். நீண்ட நாள் பிரச்னைகளைக்கூட சுமுகமாகத் தீர்த்துவைத்த பெருமை உண்டு! தூர்தர்ஷனில் 1990ல் வெளிவந்த இவரது ‘ரயில் சிநேகம்’ இன்றளவும் பேசப்படும் தொடர். கை அளவு மனசு, ரகுவம்சம், அண்ணி போன்றவையும் இவரது பரபரப்பான தொடர்களாகும்.