அஜீத்தும் விஜய்யும் அந்த விஷயத்துல ஒண்ணு?
பார்ட் 2 ஆசை இல்லாத பரமாத்மா யாருப்பா? என்கிற அளவுக்கு ஒவ்வொரு டைரக்டரையும் ஆட்டிப்படைக்கிறது பார்ட் 2 ஆசை. இனி வரும் காலங்களில் இத்துப் போன இம்சை ஸ்டார் படங்களுக்கும் கூட பார்ட்2 வரும் போலிருக்கிறது. இவிய்ங்களுக்கே இப்படின்னா, தமிழ்சினிமாவில் ஓங்கி தாங்கி வளர்ந்து ஆலமரமாக நிற்கும் அஜீத் விஜய் இருவருக்கும் அந்த ஆசை இருக்காதா என்ன? இருக்கே….!
என்னை அறிந்தால் படக் கதையை அஜீத்திற்கு சொல்லும்போதே, இதை பார்ட் டூ வாக எதிர்காலத்தில் பிளான் பண்ணலாம் என்றுதான் கடைசியாக சொல்லி முடித்தாராம் கவுதம். ஆனாலும் அவர் கிளைமாக்சை மட்டும் சொல்லாமல் இழுத்தடித்து வந்ததை அஜீத்தே மன்னிக்கப் போவதில்லை. இப்பவும் என்னை அறிந்தால் படத்தின் பார்ட்2 வை எடுக்கிற எண்ணத்தில்தான் இருக்கிறார் அவர். பல்வேறு சுற்றளவுகளில் வியூகம் அமைத்து, அஜீத்தை வளைத்துப் போட தினந்தோறும் முயன்று கொண்டுதான் இருக்கிறார். இருந்தாலும் அஜீத் பிடி கொடுப்பாரா என்பதை காலம்தான் தீர்மானிக்க வேண்டும்.
அதே போல ஒரு முடிவை எடுத்திருக்கிறார் விஜய். தற்போது உருவாகி வரும் தெறி படத்தின் க்ளைமாக்சில் ஓப்பனாகவே செகன்ட் பார்ட் மூடுக்கு ரசிகர்களை கொண்டுவரப் போகிறார்களாம். அதற்கேற்றார் போல, அட்லீயுடன் மீண்டும் ஒரு படம் செய்யப் போகிற தகவலை நமது இணைய தளம்தான் உலகத்திற்கு அறிவித்தது என்பதையும் அடக்க ஒடுக்கமாக சொல்லிக் கொள்கிறோம். இப்படி இருவரும் ஒரு விஷயத்தில் பச்சைக் கொடி காட்டி வருவது யதேச்சையாக நடந்தாலும், இன்டஸ்ட்ரிக்கு பணப்புழக்கத்தை ஏற்படுத்தப் போகும் நல்ல விஷயம் என்பதால், நாலாபுறத்திலிருந்தும் ஆசிர்வாதம் ஒலிக்கட்டும்!