பாரதிராஜா அகத்தியன் கூட்டணியில் முறிவா?
இயக்குனர் பாரதிராஜா ஒரே நேரத்தில் ஐந்து படங்களை தயாரிப்பதாக செய்திகள்! அதில் ஒரு படத்தை தமிழ்சினிமாவுக்காக தேசிய விருது பெற்றுத்தந்தவரும், காதல் கோட்டை, கோகுலத்தில் சீதை, விடுகதை போன்ற ‘ஊர் போற்றும்’ படங்களை தந்தவருமான அகத்தியன் இயக்குவதாகவும் அறிவிக்கப்பட்டது. ஒரு தாத்தாவின் தள்ளாட்டத்தை இன்னொரு தாத்தாவே அறிவார் என்பதற்கேற்ப, வெகுகாலம் படம் இல்லாமல் இருந்த அகத்தியனை அழைத்து கொடுத்தார் பாரதிராஜா. நிஜமாகவே பாராட்டுக்குரிய விஷயம்தான் அது.
ஆனால் இருபெரும் சிங்கங்கள் ஒரு காட்டில் வாழ முடியாதல்லவா? அப்படிதான் ஆகிவிட்டதாம் இந்த படத்தின் போக்கும். தனது மகள் விஜயலட்சுமியையே ஹீரோயினாக நடிக்க வைத்து இந்த படத்தை இயக்க கிளம்பினார் அகத்தியன். முதல் ஷெட்யூல் முழுக்க பொள்ளாச்சியில் நடைபெறுவதாக திட்டம். இதற்காக தனது யூனிட்டோடு போய் இறங்கிய அகத்தியன், சுமார் முப்பது நாட்களுக்கும் மேல் அங்கேயே தங்கியிருந்து முக்கால் வாசி படத்தை முடித்துவிட்டு திரும்புவதாக பிளான்.
ஆனால் இந்த பிளான் எல்லாம், பிகாஸ் ஆஃப் ஈகோவினால் டமால் ஆகிவிட்டதாக கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். படப்பிடிப்பு துவங்கி ஒரு வாரம் கூட ஆகவில்லையாம். அதற்குள் பாரதிராஜாவுக்கும் அகத்தியனுக்கும் ஏதோ கருத்து மோதலாம். படப்பிடிப்பையே கேன்சல் செய்துவிட்டு மொத்த யூனிட்டோடும் சென்னை திரும்பிவிட்டார் அகத்தியன்.