சிம்பு கைவிட்டார் நயன்தாரா கை கொடுத்தார் கோலமாவு கோகிலா மர்மம்!
சிம்புவும் நயன்தாராவும் ஒரு காலத்தில் செம்பும் பொன்னுமாக சேர்ந்தே மின்னிக் கொண்டிருந்ததை இப்போது மட்டுமல்ல, எப்போதும் மறக்காது நாடு. அதற்கப்புறம் மொத்த காதலையும் கொஸ்டீன் மார்க்குக்குள் கொண்டு வந்தார் மிஸ்டர் எஸ்டிஆர். ஜோடி பிரிந்தது. ‘ஒனக்கொரு பிரபுதேவான்னா, எனக்கொரு ஹன்சிகா’ என்று முறுக்கினார் சிம்பு. மொத்தத்தில் காதல், டமால் டமால்!
அதற்கப்புறமும் சேர்ந்தது ஜோடி. நிஜத்தில் அல்ல. சினிமாவில்! ‘இது நம்ம ஆளு’ படத்தில் சேர்ந்து நடித்தாலும், சேறும் பில்டருமாக கவனமாகவே இருந்தார் நயன்தாரா. இது ஒரு பிளாஷ்பேக்.
அப்படியே இன்னொரு பிளாஷ்பேக்.
லிங்குசாமி, சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்க நினைத்தார். ஆரம்பக்கட்ட பேச்சு வார்த்தைகள் அமோகமாக துவங்கியது. ஆனால் பினிஷிங்? பெரும் கொடுமை. சிம்புவை அப்படியே கை கழுவிவிட்டு, ஆர்யாவுடன் இணைந்து அந்த ‘வேட்டை’ என்ற படத்தை துவங்கினார் லிங்கு. கடும் கோபத்திற்கு ஆளான சிம்பு, “நீ வேட்டைன்னா நான் வேட்டை மன்னன்” என்று ரோசத்தை பொத்து ஊற்றினார். விறுவிறுவென வளர்ந்த அந்த படத்தை இயக்கியவர் நெல்சன் என்ற அறிமுக இயக்குனர். சிம்பு படத்தில் ஆரம்பம் ஜோராக இருக்கும். முடிவு நஞ்சுப்போன நாராகதானே இருக்கும்? ‘வேட்டை மன்னன்’ படத்தை பாதியிலேயே டிராப் பண்ணிவிட்டார் சிம்பு.
மனம் நொந்து சுற்றிக் கொண்டிருந்த நெல்சனின் கதையை, யாரோ சொல்லி கேட்ட நயன்தாரா, ‘தம்பி வா… தலைமையேற்க வா என்று அழைக்க….’ இதோ ஜொலி ஜொலிப்பும் மினுமினுப்புமாக ஸ்டார்ட் ஆகிவிட்டது ‘கோலமாவு கோகிலா’ என்ற படம்.
இப்படத்தை தயாரிப்பது பிரபல பிரமாண்ட நிறுவனமான லைக்கா. நயன்தாரா சம்மதிக்காமலிருந்தால் இப்படமே துவங்கப்பட்டிருக்குமா என்பதுதான் டவுட். தன் முன்னாள் காதலனால் கைவிடப்பட்ட ஒரு இயக்குனருக்கு ஆறுதல் தந்த நயன்தாராவுக்கு தனிப்பட்ட பாராட்டுகள்.
ஒரு மனசோட வலி, அதே மின்னலால் தாக்கப்பட்ட இன்னொரு மனசுக்குதானே தெரியும்?