சிவாஜி வீட்டில் ஜக்கி! எப்படி… எப்படி… நடந்தது எப்படி?
அண்மைக்காலமாக காவேரி மீட்டெடுப்பு விஷயத்தை கையில் எடுத்திருக்கிறார் ஜக்கி வாசுதேவ். ஆன்மீக பெரியவர்கள் அரசியல் விவகாரங்களில் தலையிடுவது இன்று நேற்றல்ல. மன்னர் காலம் தொட்டே நடக்கிற விஷயம்தான். மரம் நடுவதில் தொடங்கி நட்ட நடுராத்திரியில் டான்ஸ் ஆடுவது வரை ஜக்கியின் செயல்பாடுகள் ரசிக்கத் தக்கதும் கூட!
பீடி விளம்பரத்திற்கு கூட கத்ரினா கைஃப் நடிச்சா நல்லாயிருக்கும் என்று யோசிக்கிற விளம்பர யுகத்தில் காவேரி மீட்பு விஷயத்திற்கும் ஒரு வௌம்பரம் இருந்தா நல்லாயிருக்குமே என்று ஜக்கி நினைக்க, கரெக்டாக அவரது ஐடியாவுக்குள் குதித்தார் சுஹாசினி. ஜக்கி வாசுதேவ் குடிசையின் நெடுநாளைய விருந்தினர்களில் ஒருவர் சுஹாசினி.
அந்த நட்பின் அடிப்படையில், ஜக்கியை சென்னைக்கே வரவழைத்தாராம் அவர்.
சென்னையில் எங்கு தங்குவது என்கிற கேள்விக்கு ஜக்கியே விடை சொன்னார். “எனக்கு சிவாஜின்னா ரொம்ப பிடிக்கும். இந்த தடவை நான் அவர் வீட்டில் தங்கணும்னு ஆசைப்படுறேன்” என்று சொல்ல, விறுவிறுவென களத்தில் இறங்கியிருக்கிறார் சுஹாசினி. பொதுவாக ஜக்கி எங்கள் வீட்டில் தங்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிற பக்தர்கள் அவரது ஆன்மீக ட்ரஸ்டுக்கு ஐம்பதாயிரம் கட்ட வேண்டும். அப்படி பணம் கட்டினால்தான் அவரது பாதம் சம்பந்தப்பட்டவர்களின் வீட்டில் பதியும். அப்படியிருக்க… சிவாஜி வீட்டில் தங்குவதற்கு ஜக்கியே விரும்பியதால் இந்த கட்டணம் ரத்து செய்யப்பட்டதாம்.
காவேரி மீட்பு குறித்து ஒரு சின்ன பிரச்சாரத்தை அங்கிருந்து மேற்கொண்ட ஜக்கி வாசுதேவுக்கு பலன் எதிர்பார்த்தபடி அமையாமல் போனதில் சற்றே வருத்தம் இருந்திருக்கும். ஏன்? மனோபாலா, பூர்ணிமா பாக்யராஜ் போன்ற சுமார் ஸ்டார்கள்தான் அங்கு வந்திருந்தார்கள். வந்தவர்களில் சற்றே மார்க்கெட் ப்ளஸ் நடிகை என்றால் த்ரிஷாவை சொல்லலாம். வந்த வேகத்தில் அருளாசி வாங்கிக் கொண்டு கிளம்பிவிட்டார் அவர். மற்றபடி பெரிய நடிகர் நடிகைகள் யாரும் வரவில்லை.
எனிவே… காவேரிக் கரையில் மரங்களை நட்டு வைக்க கிளம்பியிருக்கிறார் ஜக்கி. மரத்திற்கும் ஜக்கியின் நம்பிக்கைக்கும் ஒரு சேர தண்ணீர் ஊற்ற வேண்டிய கடமை கரையோர மக்களுக்கு இருக்கிறது.
ஆற்றின் நடுவே முளைத்துக் கிடக்கும் காட்டாமணி செடியையே பிடுங்கி எறியாதவர்கள் அவர்கள். கடவுளே… காவேரியை காப்பாற்று. கூடவே ஜக்கியின் நம்பிக்கையையும்!
Saamiyaar thana? jaggiku nadikaigal mela aasai irukumla. Nadigar Thilagam veetu valiya puthu connections poduraan polarukku.