சிசிஎல் பாலிடிக்ஸ்? விஷாலை தொடர்ந்து ஜீவாவும் விலகல்!
முதலில் சரத்குமார் தலைமையிலும் அதற்கப்புறம் விஷால் தலைமையிலும் நடந்து வந்த சிசிஎல் கிரிக்கெட் விளையாட்டு, புரபஷனல் கிரிக்கெட் வீரர்களின் மேட்சை விட படு பிரமாதமாக அமைய, நாடெங்கிலும் அதற்கு நல்ல வரவேற்பு. ஸ்பான்சர்களும் குஷியாக இந்த குழுவிற்கு ஆதரவளித்ததால், நாளொரு பந்தும் பொழுதொரு உருட்டலுமாக சந்தோஷ ஆட்டம் நடத்திக் கொண்டிருந்தது சென்னை ரைனோஸ் அணி. இப்படி மட்டையும் பந்துமாக இருந்தால், மார்க்கெட்ல முட்டை விழுந்துரும் என்பதை சற்று லேட்டாக புரிந்து கொண்டார் விஷால். அந்த நேரம் பார்த்து அவரை வெறுப்பேற்றிய சக நட்புகள், அவரை அணியை விட்டே வெளியேறுகிற அளவுக்கு படுத்தி எடுத்தது.
சரத்குமார் பாலிட்டிக்சை கூட சமாளிச்சுரலாம். கூடவே இருக்கிற கொசுக்கடிக்கு ஏது மருந்து என்று முடிவெடுத்த விஷால், நிமிஷத்தில் அந்த கேப்டன் பதவியை துறந்து விட்டு தொழிலில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதற்கப்புறம் விஷாலின் இடத்திற்கு வந்தமர்ந்தார் ஜீவா. “ஏன் அங்கே தோற்றீங்க? ஏன் இங்கே காலை வாரினீங்க? நாங்க பார்க்காத ஆளையெல்லாம் நடிகர்னு ஏமாத்தி உள்ள இறக்குறீங்களே, அது நல்லாவா இருக்கு?” என்றெல்லாம் ஜீவாவை நோக்கி பலரும் கேள்வி எழுப்ப, இதென்னடா வம்பாப் போச்சு என்றாச்சு அவரது Ball வடியும் முகம்.
நடுவில் அவரை இன்னும் மனம் நோக வைத்தார்களாம் அணிக்குள்ளிருக்கும் சிலரே. இதில் ஆத்திரத்திற்குள்ளான ஜீவா, நேற்றோடு அந்த பதவிக்கு முழுக்கு போட்டுவிட்டார். சினிமாவில் கூட இனி கிரிக்கெட் மட்டையை தூக்க மாட்டேன் என்கிற அளவுக்கு விரக்தியாகிவிட்டாராம். ஆனால், இன்று என்ன காரணத்திற்காக அவர் விலகினார் என்ற விளக்கம் ஏதும் இல்லாமல், ஜீவா சிசிஎல் கேப்டன் பதவியை துறந்தார் என்று மட்டும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
பரத்துக்கே படம் கிடைச்சுருச்சு. பரபர ஜீவா உருப்படியாக அவர் வேலையை பார்க்க தடையாக இருக்கும் ஒரு விஷயத்தை உடைத்துவிட்டு வெளியேறியதில் தப்பென்ன இருக்கு? போங்கப்பா… இத பற்றி பேசறதுக்கு பதிலா போய் பால் பொறுக்கி போடுங்க!
கடைசி நியூஸ்- ஜீவா விட்டுப்போன கேப்டன் பதவியை கேட்ச் பிடித்திருக்கிறார் ஆர்யா!