தமிழக மக்களால் மட்டுமல்ல… ரஜினியும் எதிர்பார்க்கிற படம்தான் காலா. கிட்டதட்ட கபாலி பார்ட் 2 போல உருவாகியிருக்கும் இப்படம், ரஜினியின் அரசியல் என்ட்ரிக்கு ஓரளவுக்கு சப்போர்ட்டாக இருக்கும் என்பது பலரது எதிர்பார்ப்பு. இந்த நிலையில் படத்தை அவசரம் அவசரமாக சென்சாருக்கு அனுப்பினர்.
அக்குவேறு ஆணி வேறு அலசி ஆராய்ந்த தணிக்கை குழுவினர் யு/ஏ சான்றிதழ் கொடுத்துவிட்டார்களாம். அதுமட்டுமல்ல. சில வசனங்களுக்கு மியூட், சில காட்சிகளுக்கு கட் என்று தனது அதிகாரத்தை சற்று வேகமாகவே காட்டிவிட்டார்களாம். இதில் கடும் அப்செட் ஆகியிருந்த இயக்குனர் பா.ரஞ்சித், தணிக்கை உறுப்பினர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் சொல்லப்படுகிறது.
ஏப்ரல் 27 ந் தேதி படத்தை வெளியிட்டு விட வேண்டும் என்று முதலில் துடியாய் துடித்தவர்கள், அப்படியே யு/ஏ சர்டிபிகேட்டுடன் ரிலீஸ் செய்துவிடலாம் என்று முடிவெடுத்தார்களாம். ஆனால் திரையுலக ஸ்டிரைக். வரிசைப்படிதான் படங்கள் வெளியீடு என்பதில் சங்கம் உறுதியாக இருந்ததால், இப்போது காலா வின் ரிலீஸ் தேதி அவர்களுக்கே தெரியாத சூழ்நிலை.
சும்மாதானே இருக்கோம். அந்த நேரத்துல மேல் முறையீட்டுக்கு போகலாமே என்கிற யோசனையும் இருப்பதால், யு/ஏ வை க்ளீன் யு ஆக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது காலா டீம்.