லாரன்ஸ் ஷூட்டிங்! போலீஸ் எச்சரிக்கையை மீறிய பி.வாசு!
தென்னக மொழிகள் அத்தனையையும் சேர்த்து சுமார் 65 படங்களை இயக்கி விட்டார் பி.வாசு. இன்னமும் அதே வீரியத்தோடும், விஸ்வரூபத்தோடும் இருப்பதுதான் ஆச்சர்யம். அதுவும் கன்னட சினிமாவை பொறுத்தவரை, இவர் இயக்கிய படங்கள் வருஷக்கணக்கில் ஓடிய அதிசயமெல்லாம் உண்டு. தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் சூப்பர் ஸ்டார்களை இயக்கியிருக்கும் பி.வாசுவுக்கு சமீபத்தில் வந்த சோதனை, பார்சல் சாப்பாட்டுல பல்லி விழுந்ததை போல ஷாக்.
லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க ‘சிவலிங்கா’ என்ற படத்தை இயக்கிவருகிறார் பி.வாசு. இப்படத்தை ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் தயாரிக்கிறார்.
காவிரி பிரச்சனை எப்போது தலைதூக்கும்? எப்போது மிதமாகும்? என்கிற தட்ப வெப்ப நிலை தெரியாமல் கர்நாடகாவில் மாட்டிக் கொண்டவர்களின் பாடு, அதோகதிதான். அப்படியொரு சிக்கலான நேரத்தில்தான் அங்குள்ள ஒரு பிரமாண்டமான பங்களாவில் ஷுட்டிங் எடுத்துக் கொண்டிருந்தார் வாசு. கிட்டதட்ட 23 ஆர்ட்டிஸ்டுகள் ஒரே இடத்தில் கூடியிருக்க, படு வேகமாக போய் கொண்டிருந்ததாம் ஷுட்டிங். சட்டென்று உள்ளே வந்த போலீஸ், “சார்… இங்க உள்ள சில ஆர்ப்பாட்டக்காரர்கள் உங்க ஷுட்டிங்கை நிறுத்த சொல்றாங்க. ஒரு பார்மாலிடிக்கு இன்னைக்கு மட்டும் நிறுத்திட்டு, நாளைக்கு கன்ட்டினியூ பண்ணுங்க” என்று கேட்டுக் கொண்டார்களாம்.
இவரும் சரி. இன்று நிறுத்திவிட்டு நாளை தொடரலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். விஷயம் சென்னையிலிருக்கிற தயாரிப்பாளர் ரவிந்தரனுக்கு சொல்லப்பட்டது. பதறிப்போன அவர், சார்… உங்க சேஃப்டிதான் முக்கியம். எவ்வளவு நஷ்டம் ஆனாலும் சரி. கிளம்பி வந்துருங்க. இங்கேயே அந்த பங்களாவை செட் போட்டு எடுத்துக்கலாம் என்று கூறிவிட்டாராம். 23 ஆர்ட்டிஸ்டுகளையும் மறுபடியும் ஒண்ணு சேர்க்கணும்னா ரொம்ப கஷ்டம். நான் இங்கேயே இருந்து முடிச்சுடுறேன் என்று பி.வாசு சொல்ல, அதெல்லாம் பரவாயில்லை. நீங்க அங்கிருந்து கிளம்புங்க முதல்ல என்று ரவீந்திரன் சொல்ல… எப்படியோ கிளம்பி சென்னைக்கு வந்தது சிவலிங்கா யூனிட்.
அதற்கப்புறம் அதே பங்களா செட்டை இங்கே போட்டு படத்தை முடித்தாராம். இந்த களேபரத்தில் எப்பவோ முடிய வேண்டிய படம் ஒரு மாதம் லேட்! ஜனவரி 26 ந் தேதி திரைக்கு வரும் இப்படத்தில் வடிவேலுக்கு படம் முழுக்க வேலை கொடுத்திருக்கிறார் பி.வாசு.
மாப்பூ… வச்சிட்டாண்டா ஆப்பூ.. என்கிற வடிவேலுவின் ஸ்பெஷல் பஞ்ச் பி.வாசுவின் படத்தில் வந்ததுதானே? இந்த படத்திலும் அப்படியொன்னு இருக்கு என்றார் அவர்.