கன்னத்துல அறைஞ்சீங்கல்ல? நல்லா தேடுங்க என்னை! மீனாட்சியால் வந்த வினை…
சிவப்பு மனிதர்கள் என்ற படத்தில் மீனாட்சிதான் ஹீரோயின். படப்பிடிப்பில் உதவி இயக்குனர்களுக்கும் இவருக்கும் இடையே ஏதோவொரு பிரச்சனை. இவர் அவர்களில் ஒருவரை கன்னத்தில் அறைந்துவிட்டார். சும்மாயிருப்பார்களா உதவி இயக்குனர்கள். சும்மா ரவுண்டு கட்டி, சப்பாத்தி பிசைந்துவிட்டார்கள். கன்னம் முகமெல்லாம் வீங்க, அழுத முகத்தோடு மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு போனவர்தான். அதற்கப்புறம் ஆளே எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை.
மேற்படி கலவரத்தின் போது படத்தின் இயக்குனர் அன்பு சரவணன் உதவி இயக்குனர்களுக்குதான் சப்போர்ட் பண்ணினாராம். அந்த கொடுமையையும் மனசுக்குள் நன்றாக பதிய வைத்துக் கொண்ட மீனாட்சி, இப்போது மொத்த சிவப்பு மனிதர்கள் டீமையும், அழுகை மனிதர்களாக்கி அல்லாட விட்டுவிட்டார். போன் அடித்தாலும் எடுப்பதில்லை. மெயில் அனுப்பினாலும் படிப்பதில்லை. வாட்ஸ் ஆப், பேஸ்புக் இன்பாக்ஸ் மெசேஜ் என்று எதற்கும் நோ மரியாதை.
பாதி படத்தை எடுத்தாச்சு. இனி ஹீரோயினை மாத்துனா, பாதி சுட்ட மண் சட்டி மாதிரி ஆகிடுமே என்று அஞ்சிய அன்பு சரவணன் வேலை மெனக்கெட்டு மும்பைக்கே போய்விட்டார். போனால்… மீனாட்சி இருந்தால்தானே? வீட்டை காலி பண்ணிவிட்டு எப்பவோ கிளம்பிவிட்டாராம் அந்த ஏரியாவிலிருந்து. அக்கம் பக்கத்தில் விசாரித்தால், “அவர் நடிகையா? எங்களுக்கு தெரியாதே” என்கிறார்களாம்.
காணவில்லை போஸ்டர் அடித்து கண்ட இடத்திலும் ஒட்டினால் கூட மீனாட்சி இனி தமிழுக்கு வரமாட்டார். அடிச்சது தப்பா, அடிக்கவிட்டது தப்பா?