அது கவர்ச்சியா, கவுச்சியா? சென்சாரை மிரள வைக்கப்போகும் வனிதா!
நடிகை மஞ்சுளாவின் மகள் வனிதா போலீஸ் கமிஷனர் ஆபிசுக்கு வந்தாலே பரபரப்பு தொற்றிக் கொள்ளும். யாராவது ஒரு நபரை பற்றி புகார் கொடுப்பதுடன் ‘அடித்தான்… உதைத்தான்… பணம் கேட்டான்… பிளாக்மெயில் செஞ்சான்…’ என்று பல்வேறு திகில் கதைகளை ஒரே நேரத்தில் அவிழ்த்துவிட்டு, நாட்டையை என்டர்டெயின்ட்மென்ட்டாக வைத்திருப்பார். அப்படிப்பட்ட அவரே ஒரு படம் தயாரித்தால் அது எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும்?
கையில் பணமில்லாமலே படம் தயாரிக்க வந்தேன். நண்பர்கள் உதவியோட படத்தையே முடிச்சிட்டேன். எனக்கே ஆச்சர்யமா இருக்கு என்றார் வனிதா. அவர் தயாரித்து வரும் படம் ‘எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல்!’ ‘இவங்க நாலு பேருமே எங்க குடும்பத்துக்கு ரொம்ப நெருக்கமானவங்க. எங்கம்மா எம்ஜிஆரோட நிறைய படங்களில் நடிச்சிருக்காங்க. அவங்க அவரை பற்றி நிறைய பாசிட்டிவ் சம்பவங்களா சொல்லியிருக்காங்க. சிவாஜி அங்கிள் வீட்டிலதான் நான் சின்ன வயசுல ஓடியாடி விளையாடியிருக்கேன். ரஜினி அங்கிள் எங்க பேமிலி பிரண்ட். ஜில்லு ஆன்ட்டி (லதா) கையால நிறைய சாப்பிட்ருக்கேன். கமல் சாரை கொஞ்சம் தள்ளி நின்று பிரமிச்சிருக்கேன். என் அப்பாவை மாப்ளேன்னுதான் கூப்பிடுவார் அவர். எங்க வீட்டுக்கு அடிக்கடி வருவார். இப்படி என் வாழ்க்கையோட சம்பந்தப்பட்ட இந்த நாலு பேரோட பெயரையும் நான் இந்த டைட்டிலில் யூஸ் பண்ணியிருக்கேன்.
ஒவ்வொரு வீக் எண்டுலேயும் எங்க வீட்ல கெட் டுகெதர் நடக்கும். அப்ப நாங்க பிரண்ட்ஸ்களுக்குள்ள விளையாடிட்டு இருக்கும் போது கிடைச்ச ஒரு சின்ன நாட் இன்னைக்கு படமா வளர்ந்து நிற்குது. டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் இந்த படத்தை இயக்கியிருக்கார். முக்கியமான கேரக்டரில் இன்னொரு டான்ஸ் மாஸ்டர் ராம்ஜி நடிச்சிருக்கார் என்றார் வனிதா.
சாதாரணமாகவே தன் படங்களில் இன்ஸ்ட்ரூமென்டுகளை உருட்டி இசையை கிளப்பும் ஸ்ரீகாந்த் தேவா இந்த படத்திற்காக போட்டிருக்கும் குத்துப்பாடல்கள், சரியான கும்மாங்குத்து பாடல்களாக இருக்கப் போவது நிச்சயம்.
கதைக்களம் வட சென்னையும், அங்கிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளும்தான். திரையிடப்பட்ட ஒரு டப்பாங்குத்து பாடலில் படத்தின் ஹீரோயினும், இன்னொரு வெண்கல டிரம்மும் தாறுமாறாக ஒரு கெட்ட ஆட்டம் போட்டார்கள். அது கவர்ச்சியா? கவுச்சியா? என்பதை சரியாக கண்டுபிடித்துச் சொல்லும் ரசிகர்களுக்கு இந்த சிறந்த மோப்ப சக்தியாளர் விருது கொடுத்து கவுரவப்படுத்…. ஸாரி, ‘கலவரப்படுத்தலாம்!’