மாதவன் படத்திற்கு சிக்கல்! விஞ்ஞானிக்கே வெடிகுண்டா?

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஒரு விஷயம் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வேடத்தில் நடிகர் மாதவன் நடிக்கப் போகிறார் என்கிற விஷயம்தான் அது. யாரிந்த நம்பி நாராயணன்?

பிரபல விஞ்ஞானியான இவர், ராக்கெட் விஞ்ஞானத்தில் பல சாதனைகளை புரிந்தவர். 90 களில் இவரை திடீரென கைது செய்த அரசு, அவர் மீது தேச துரோக வழக்கை பாய்ச்சியது. குற்றம் நடந்தது என்ன?

இஸ்ரோவின் பல ரகசியங்களை இவர் பாகிஸ்தானுக்கு விற்றுவிட்டார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு. ஆனால் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சட்ட போராட்டம் நடத்திய நம்பி நாராயணன் தான் குற்றவாளி இல்லை என்று நிரூபணம் ஆனதுடன், ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு அரசு மீது வழக்கும் தொடர்ந்திருக்கிறார். 50 லட்சம் நஷ்ட ஈடு தரச்சொல்லி உச்ச நீதிமன்றமும் தீர்ப்பளித்திருக்கிறது. இந்த கதையைதான் படமாக்கப் போகிறார்கள். இங்குதான் சிக்கல்.

சென்னையிலிருக்கும் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன், விஞ்ஞானி நம்பி நாராயணின் நெருங்கிய உறவினர். அந்த வகையில் நம்பிக்கு உதவிய குமரன், 95 ஆம் ஆண்டு இவரது வாழ்க்கை வரலாற்றை ஒரு டி.வி சீரியலாக தயாரித்திருக்கிறார். நம்பி நாராயணனின் வேண்டுகோளுக்கு இணங்க எடுக்கப்பட்ட இந்த தொடரை சட்ட சிக்கல் காரணமாக சன் தொலைக்காட்சியும், ஜெயா தொலைக்காட்சியும் மறுத்துவிட, பெரும் கடன் சுமைக்கு ஆளாகிவிட்டார் எஸ்.எஸ்.குமரன். எப்படியோ அந்த கடனை அடைத்து சினிமாவில் ஒரு இடத்தையும் பிடித்துவிட்டாலும், தனது தாய் மாமனான நம்பி நாராயணன் மீண்டும் தனக்கே அவரது வாழ்க்கை வரலாற்று படத்தை எடுக்க உதவிடுவார் என்று நம்பினாராம்.

ஆனால் அந்த உரிமையைதான் 30 லட்சம் ரூபாய்க்கு வேறொரு சினிமா நிறுவனத்திற்கு தாரை வார்த்துவிட்டார் நம்பி நாராயணன்.

பேரதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கும் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன், “தனக்கு ஒரு வழி சொல்லாமல் யாரும் இந்த கதையை படமாக்க விட மாட்டேன். நீதிமன்றத்திற்கு செல்வேன்” என்று எச்சரித்திருக்கிறார்.

இது மாமன் மைத்துனர் சண்டை அல்ல. இந்தியாவின் புகழ் பெற்ற விஞ்ஞானிக்கும், ஒரு படைப்பாளிக்கும் இடையே நடக்கிற சண்டை.

யார் யாரெல்லாம் தலையிட்டு குழப்பம் ஏற்படுத்த முடியுமோ, கிளம்புங்க போராளிஸ்…

பின் குறிப்பு- பூ, களவாணி ஆகிய இரண்டு ஹிட் படங்களுக்கு இனிய இசையை வழங்கியவர் எஸ்.எஸ்.குமரன்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பத்து கோடி கடன்! மீண்டும் மீண்டும் கை கொடுக்கும் பிரபுதேவா!

Close