ஒருவழியா ஆள விட்டாரு பாலா! அதற்கும் முன்னாலேயே உஷாரான சசிகுமார்
பாலா படத்தில் நடிப்பதென்பது ஐந்தாண்டு திட்டம் போல அவ்வளவு இழுவை! தெரிந்தே சிக்கிக் கொண்ட சசிகுமாருக்கு, நெஞ்செல்லாம் பதற்றம். மனுஷன் கஷ்டப்பட்டு கைப்பற்றிய கேரியர், காம்பவன்ட்ல ஒட்டுன போஸ்டர் மாதிரி! ஒருத்தன் ஒட்டிட்டு போன ஈரம் காயறதுக்குள்ளேயே இன்னொருத்தன் வந்து அது மேல ஒட்டிட்டு போறான். இதுல சசிகுமார்ங்கிறது எட்டு பிட்டு போஸ்டரா இருந்தாலும், பின்னாடி புதுசு புதுசா எவன் எவனோ வந்து பதினாறு பிட் ஒட்றானே என்கிற பதற்றம்தான் அது.
நம்மள ஜனங்க மறக்கறதுக்குள்ள, ‘உள்ளேன் ஐயா’ சொல்லிடணும் என்பது அவரது எண்ணம். பொறுத்து பொறுத்து பார்த்த சசி, தாரை தப்பட்டை படத்தின் தயாரிப்பாளராக தானே மாறி, படத்தை முடிக்க வைத்துவிட்டார். நடுநடுவே ஷுட்டிங் பிரேக்கில் தனி ஒருவனாக அவர் கிளம்பி போவதை ஒருவரும் கவனித்தாரில்லை. இப்போதுதான் விஷயம் லேசாக கசிகிறது. அவரே நடிக்கும் இன்னொரு படத்தின் வேலையை ஆரம்பித்து டி.இமானிடம் ஐந்து பாடல்கள் கூட கம்போஸ் செய்துவிட்டார்களாம்.
சசியின் உதவியாளர் ஒருவரே இந்த படத்தை இயக்கப் போகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் ‘தாரை தப்பட்டை’ ரிலீசுக்காகவோ, பிரமோஷனுக்காகவோ ஒரு நாளும் காத்திருக்காது. நினைத்த நேரத்தில் நடக்கும் என்பதுதான் இப்போதைய செய்தி.