வளர்த்துவிட்டவருக்கு வழி காட்டுவோம்! நெகிழ வைக்கும் வடிவேலு!
தஞ்சாவூர் பெரிய கோவில் தலைகுப்புற விழுந்த மாதிரி விழுந்து கிடக்கிறார் வடிவேலு. இந்த நிமிஷம் வரைக்கும் கூட, வடிவேலுவின் காமெடியை டச் பண்ண ஆளில்லாமல் திணறிக் கொண்டிருக்கிறது கோடம்பாக்கம். இப்பவும் சில படத்தில் வரும் காமெடிகளை பார்க்கும் போது, “பாவி மனுஷா… மறுபடியும் வந்து தொலையேன்யா” என்று வடிவேலுவைதான் நினைக்கிறது மனசு.
இருந்தாலும், கர்வம்… திமிரு… அகங்காரம் எல்லாவற்றையும் போட்டு புரட்டி, அதையே மெத்தையாக்கி படுத்திருக்கிறார் அவர். இயக்குனர்களின் கைப்பிள்ளையாக அவர் என்றைக்கு மாறுகிறாரோ, அன்று நமது மண்ணின் மைந்தன் வடிவேலு நமக்கு முழுசாக கிடைத்துவிடுவார். விமர்சனங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். வடிவேலு மனசில் இப்போது வந்திருக்கும் ஈரம், எல்லாரும் அவரை பாராட்ட வேண்டிய தருணம்.
சிலை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு வெளியே வந்திருக்கிறார் பிரபல குடும்பப்பட இயக்குனர் வீ.சேகர். “நல்ல மனுஷன்… எப்படியோ சதியில சிக்கிட்டாரு” என்பதாகவே இருக்கிறது திரையுலகம் அவர் மீது வைத்துள்ள இமேஜ். அதற்கேற்ப, “நான் நிரபராதி” என்றே கூறிவருகிறார் அவரும். ஒரு காலத்தில் வடிவேலுவை வைத்து நல்ல நல்ல படங்களாக கொடுத்தவர் அவர். தானும் வளர்ந்து வடிவேலுவையும் வளர்த்துவிட்டவரல்லவா? இப்போது இவர் மீதுதான் கருணைக்கடல் ஆகிக் கிடக்கிறாராம் வடிவேலு.
“உங்க கம்பெனியை மீண்டும் தூசு தட்டுங்க. தொடர்ந்து நான் உங்களுக்கு கால்ஷீட் தர்றேன். படம் எடுங்க. லாபம் வந்த பின் சம்பளம் கொடுத்தா போதும்” என்று கூறியிருக்கிறாராம். அதற்கான வேலைகளில் இறங்கியிருக்கிறார் வீ.சேகர்.
களங்கத்தை துடைச்சுட்டு கம்பீரமா வாங்க சார்…