கெஸ்ட் ரோல்ல நடிப்பேன்! ஆனால் ஒரு கண்டிஷன்! விஜய்சேதுபதி புது ரூட்!
விஜய் சேதுபதி போல மலிவு விலையில் மதுக்கடை திறந்தவர்கள் தமிழ்சினிமாவில் யாரும் இருக்கப் போவதில்லை. இவர் வந்தால், தியேட்டரே மதுக் குடித்த மந்தி போலாகிவிடுகிறது என்பதை அறிந்த இயக்குனர்கள், “சார்… ஒரு காட்சியில் மட்டும் வந்து பர்பாமென்ஸ் பண்ணித்தரணும்” என்று அன்புத் தொல்லை கொடுக்கிறார்கள். சிலருக்கு சம்பளத்தை வாங்கிக் கொண்டும், சிலருக்கு போனால் போவுது என்றும் நடித்துக் கொடுப்பது விஜய் சேதுபதியின் விசேஷங்களில் ஒன்று.
அப்படிதான் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் அதர்வா நயன்தாராவுடன் சில காட்சிகளில் நடிக்க சம்மதித்துவிட்டார் விஜய் சேதுபதி! அதிலும் ‘நானும் ரவுடிதான்’ படத்திற்கு பிறகு இவரும் நயன்தாராவும் ஒரு படத்தில் இருந்தால், அதை வைத்தே கல்லா கட்டலாம் என்பது தயாரிப்பாளர்களின் தந்திரமாகவும் இருக்குமல்லவா? அதனால்தான் மக்கள் செல்வனுக்கு வலிய வலிய அழைப்பு வைத்தார்கள். படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்துவுக்காக ஒப்புக் கொண்டார் இவர்.
ஆனாலும் ஒரு கண்டிஷன் வைத்தாராம். “எனக்கும் நயன்தாராவுக்கும் சேர்ந்தாப்ல ஒரு பாட்டு வேணும். முடியுமா?” என்று!
பெருமாளே இறங்கி வந்து லட்டு கேட்டால் பேசாமலா இருக்கும் சமூகம்? உடனடியாக ஒரு டூயட்டுக்கு ஏற்பாடு பண்ணிவிட்டார்கள். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். விஜய் சேதுபதி உள்ளே வந்ததும், அதர்வாவின் அந்தஸ்து அதல பாதாளத்திற்கு போய்விட்டது.
எப்படியோ… தேவைன்னு வந்துட்டா ஐஸ்கிரீமுக்கே ஸ்வெட்டர் போடுற ஊராச்சே கோடம்பாக்கம்?
https://youtu.be/3zSjUMwSsLo