விவசாயிக்கு உதவிய விஷால்! கொண்டாடும் தமிழ்நாடு….
“விவசாயத்தை மதிக்கலேன்னா நாடு நாசமா போகும்” என்று அக்கறையுள்ள ஒவ்வொரு குடிமகனும் சொல்லிக் கொண்டிருந்தாலும், விவசாயிகளுக்கு எதிரான போக்கு ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டேயிருக்கிறது. அண்மைக்கால உதாரணம் இதுதான். தஞ்சை மாவட்ட விவசாயி ஒருவர் கடனில் வாங்கி ஓட்டிக் கொண்டிருந்த டிராக்டரை சில மாத தவணைகளுக்காக பறிமுதல் செய்தது மகேந்திரா நிறுவனம். பறிமுதல் செய்தது கூட பிரச்சனையில்லை. அவர்கள் நடந்து கொண்ட விதம்தான் கொடூரம். போலீஸ் துணையுடன் பைனான்ஸ் நிறுவன ஆட்களும் சேர்ந்து அவரை கடுமையாக தாக்கிவிட்டு டிராக்டரை ஓட்டி சென்றுவிட்டார்கள். இதையெல்லாம் செல்போனில் பதிவு செய்து வாட்ஸ் ஆப்பில் உலவ விட்டார்கள் ஊர் மக்கள்.
அவ்வளவுதான்… “அடச்சே” என்று சாபம் கொடுக்க ஆரம்பித்துவிட்டது ஒட்டுமொத்த தமிழகமும். அரசும் இந்த விஷயத்தில் உடனே விழித்துக் கொண்டு சம்பந்தப்பட்ட காவலர்களை இட மாற்றம் செய்துள்ளது.
இதற்கிடையில் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட நடிகர் விஷால், அந்த விவசாயிக்கு ஆறுதல் கூறியிருப்பதுடன் அவரது கடனை முழுமையாக அடைக்கவும் விரும்புவதாக கூறியிருக்கிறார். வெறும் சொல்லோடு நிறுத்திக் கொள்ளாமல் அதற்காக முழு வேகத்தில் செயல்பட்டும் இருக்கிறார். அவரது நல்ல மனசை பாராட்டாதவர்கள் யாரும் இருக்க முடியாது. பாராட்டாதவர்கள் மனிதனாகவே இருக்க முடியாது. வெல்டன் விஷால்!