குட்டிப்புலி – விமர்சனம்

குட்டிப்புலியை ஓபாமா பார்த்திருந்தால் தன் நாட்டு சுற்றுலா பயணிகளை மதுரை பக்கம் எட்டிப்பார்க்கவே வேண்டாம் என்று எச்சரித்திருருப்பார். மதுரைக்காரய்ங்க எல்லாரும் அருவா முனையிலதான் பேஸ்ட் வச்சு பல் விளக்குவாய்ங்க என்கிற தோற்றத்தை ஏற்படுத்துகிறது இப்படம்.

சுப்ரமணியபுரம், நாடோடிகள், சுந்தரபாண்டியன் வரிசையில் இந்த முறையும் அரிவாளுக்கு ஆயுத பூஜை நடத்தியிருக்கிற அரும்பணியை திறம்பட செய்திருக்கிறார் சசிகுமார். உடன் உதவிய புதுமுக இயக்குனர் முத்தையாவுக்கு ‘ரத்த’ கையெழுத்துடன் ஒரு கடிதம் எழுதலாம்.

நாங்க கும்புடுற குலசாமியெல்லாம் என்ன காரியம் பண்ணிட்டு இப்படி சிலையா நிக்குதுங்க என்கிற அதிர்ச்சிகரமான உண்மையை சரண்யா கேரக்டர் மூலம் சொல்லியிருக்கிறார் டைரக்டர். படத்தில் சரண்யா ஏற்படுத்திய குல நடுக்கம் பத்து தீமிதி, பனிரெண்டு அலகு குத்தலுக்கு சமம்!

ஊரில் வெட்டியாக திரியாமல் ஏதோவொரு வேலையோடு திரிகிறார் சசிகுமார். இவருக்கு காதல் என்றாலோ கல்யாணம் என்றாலோ மூக்கு மேல் கோபம் வருகிற அளவுக்கு அலர்ஜி. போற இடத்துல எல்லாம் எதிரியை சம்பாதிச்சு வச்சுருக்கோம். எங்க எவன் போடுவான்னே தெரியாது. இந்த லட்சணத்துல நமக்கெதுக்கு குடும்பம், குட்டி என்பதுதான் குட்டிப்புலியின் லாஜிக். இதெல்லாம் புரியாத லட்சுமி மேனன் சசிகுமாரை லுக் விட, ஆரம்பத்தில் சைடு வாங்கி தப்பிக்கிறது குட்டிப்புலி. அதற்கப்புறம் இவரும் காதலில் விழ… பல வருஷமாக கல்யாணமே வேண்டாம் என்று முரண்டு பிடித்த மகன் காதலிக்கிறான் என்றதும் சந்தோஷம் கரைபுரண்டோடுகிறது அம்மா சரண்யாவுக்கு. இந்த வைபோக வாழ்க்கைக்கு எதிராக அருவா தீட்டும் வில்லனை அப்படியே இழுத்து வச்சு அறுப்பதோடு படம் எண்ட்!

இப்பவாவது பெண் தெய்வங்களின் பேக்ரவுண்டு புரியுதா உங்களுக்கெல்லாம்? என்கிற ஷார்ப் கேள்வியோடு நம்மை வழியனுப்பி வைக்கிறார் டைரக்டர் முத்தையா. இந்த ‘சுப்பிரமணிய சுந்தரபாண்டிய’ கதையை மறுபடியும் ஒருமுறை ரசிக்க வைத்திருப்பதே இப்படத்தின் ப்ளஸ்.

ஒட்ட நறுக்கிய ஹேர் ஸ்டைல், சற்றே முறுக்கிவிடப்பட்ட மீசை, பின்னால் கையை கட்டிக்கொண்டு நடக்கிற அலட்சியம். இப்படி மதுரக்காரனின் தீவிரத்தை பாடி லாங்குவேஜில் பழக விடுகிறார் சசிகுமார். வார்த்தைக்கு வார்த்தை ‘நம்மள்ளாம் பொம்பளைகள சாமியா நினைக்கிறவய்ங்க’ என்று இவர் கூறுவதை பார்த்தால் திட்டம் பலமாக இருக்கும்போல தெரிகிறது. கம்பீரமான புலியாக இருந்தாலும் காதல் என்று வந்துவிட்டால் கழுத்தோரம் வியர்த்துக் கொட்டுகிற எலிதான் என்பதை அழகாக ஓப்பன் பண்ணுகிறார் சசி.

மாடர்ன் டிரஸ்செல்லாம் பண்ணிக் கொண்டு ஒரு காட்சியில் சசிகுமார் பண்ணுகிற அலப்பறையை பார்த்தால், ‘இருக்குடீய் பின்னால’ என்பது போலவே இருக்கிறது.

லட்சுமி மேனன் ஆர்ப்பாட்டமில்லாத சிம்பிள் தேவதையாக வந்து போகிறார். அதிகம் நடித்துத்தள்ள வேண்டிய வேலையே இல்லை இவருக்கு. காதலனை கடந்து போகிற போது பார்க்கிற குறுகுறு பார்வை மட்டும் குறுவை சாகுபடி போல அசால்டாக விளைந்து கிடக்கிறது லட்சுமிமேனனின் கண்களில்.

தாய் பாச கேரக்டருக்கு உலக அளவில் போட்டி வைத்தால் கூட சரண்யாவுக்குதான் முதலிடம் கிடைக்கும். இந்த படத்தில் இவர் மட்டுமல்ல, பார்வதியும் இன்னொரு ஆத்தாவாக பர்பாமென்ஸ் கொடுக்கிறார் சசிகுமாருக்காக. ரெண்டு பேரும் சேர்ந்து கொண்டு செய்கிற அந்த கொலை, குலை நடுக்கம்!

சந்தானம் சூரிகள் என்றில்லை, சசிகுமார் வழக்கமாக நம்பும் பரணி கூட இல்லை இந்த படத்தில். யாரோ நாலைந்து விடலை பசங்களை வைத்துக் கொண்டு லாஃபிங் கேம் ஆட ட்ரை பண்ணியிருக்கிறார்கள். பட் நோ பீஸ் ஆஃப் ஸ்மைல்!

படத்திற்கு இசை ஜிப்ரான் என்கிறது டைட்டில். ஆனால் இசைஞானியின் எய்ட்டீஸ் பாடல்களை நம்பியே டிராவல் ஆகிறது காட்சிகள் எல்லாம். அதிலும் ஒரு முழு பாடலை தயவு தாட்சண்யம் பார்க்காமல் சுட்டிருப்பது ரசிகர்களுக்கு ஆனந்தம். ராஜாவுக்கு?

மகன் கழுத்த அறுக்க நினைக்கிறவனோட கழுத்தை ஆத்தாவே அறுத்துப்புடுறா… என்று ஒரு வரியில் ஆரம்பித்த கதையாக இருக்கலாம். எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ் சறுக்கினாலும் புலியின் கம்பீரம் சறுக்கவில்லை என்பதுதான் சி கிளாஸ் ரசிகனின் ஏ கிளாஸ் சமாதானம்!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.