தமிழன் என்று சொல்லடா… தள்ளாடியபடி நில்லடா!

இந்த ஆண்டு ரைட்மந்த்ரா விருதுகள் பட்டியலில் ஒன்பது பேர் தான் இடம்பெற்றிருந்தனர். ஆனால் விழா நெருங்கும் சமயம் அதாவது கடைசி நேரம் ஒருவர் சேர்க்கப்பட்டு மொத்தம் பத்து பேர் இந்த விருது பெற்றனர். கடைசியாக சேர்க்கப்பட்ட அந்த நபர் யார் ? அப்படி என்ன சாதனை செய்துவிட்டார்?

தமிழகத்தில் உள்ள 7.20 கோடி மக்களில், ஒரு கோடி பேருக்கு மேல் மது பழக்கத்துக்கு அடிமையாக உள்ளனர் என்று புள்ளிவிபரம் கூறுகிறது. விவசாயத் தொழிலாளர்கள் முதல் கூலித் தொழிலாளர்கள் வரை அடித்தட்டு மக்கள், கல்லூரி மாணவர்கள் என பலர் மதுவுக்கு அடிமையாக உள்ளனர். மதுகுடிப்பதை ஒரு ஹீரோயிசம் போன்று காட்டும் திரைப்படங்களால் பள்ளி மாணவர்களும், மது பழக்கத்துக்கு அடிமையாகி வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் வகுப்பறையிலேயே ஆறு மாணவர்கள் மதுவருந்தி சஸ்பெண்ட் ஆன சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியடையச் செய்தது.

நமது மாநிலத்தின் வளர்ச்சியை அரித்து வரும் மிகப் பெரிய நோய் இந்த மதுப்பழக்கம்.

கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல் – (கள்ளுண்ணாமை – குறள் 925)

ஆகாய கங்கை காய்ந்தாலும் காயும் சாராய கங்கை காயாதடா
ஆள்வோர்கள் போடும் சட்டங்கள் யாவும் காசுள்ள பக்கம் பாயாதடா
குடிச்சவன் போதையில் நிற்பான் குடும்பத்தை வீதியில் வைப்பான்
தடுப்பது யாரென்று கொஞ்சம் நீ கேளடா

கள்ளுக்கடைக் கடைக் காசிலே தாண்டா கட்சிக் கொடி ஏறுது போடா
கள்ளுக்கடைக் கடைக் காசிலே தாண்டா கட்சிக் கொடி ஏறுது போடா
மண்ணோடு போகாமல் நம் நாடு திருந்தச் செய்யோணும்

உன்னால் முடியும் – அட உன்னால் முடியும் – ஆஹா
உன்னால் முடியும் தம்பி தம்பி – அட உனக்குள் இருக்கும் உன்னை நம்பி

இந்நிலையில் சென்ற வாரம் ஒரு நாள் www.newtamilcinema.in என்கிற இணையத்தில் திரைப்பட விமர்சனம் ஒன்றை தற்செயலாக பார்க்க நேர்ந்தது. அதன் ஆசிரியர் திரு.அந்தணனை கடந்த பல வருடங்களாக நாம் அறிவோம். வணிக ரீதியிலான நிர்பந்தங்களுக்கோ சொந்த விருப்பு வெறுப்புக்களுக்கோ இடம் கொடுக்காமல் விமர்சனத்தை எழுதும் பண்புள்ளவர் என்பதால் அவர் எழுதும் திரைப்பட விமர்சனங்களுக்கு வலையுலகில் தனி எதிர்பார்ப்பு உண்டு. யார் எவர் நடித்திருந்தாலும் இயக்கியிருந்தாலும் தரங்கெட்ட படங்களை குட்டவும், தரமான படங்களை தட்டிக்கொடுக்கவும் அவர் தவறியதில்லை. அவர் விமர்சனங்களை அவ்வப்போது படித்து அவரை அலைபேசியில் அழைத்து பாராட்டுவது நம் வாடிக்கை. கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் வாழ்க்கை வரலாறு அண்மையில் படமாக ‘ராமானுஜன்’ என்கிற பெயரில் வெளியானபோது அவர் எழுதிய விமர்சனத்தை பார்த்து அவரை அலைபேசியில் அழைத்து பாராட்டினோம். ஒரு படைப்பாளிக்கு தனது படைப்பை பாராட்டி அதை நான்கு பேருக்கு பகிர்வதைவிட மிகப் பெரிய சந்தோஷம் வேறு எதுவும் இருக்க முடியுமா என்ன…

மீண்டும் விஷயத்திற்கு வருகிறோம். சமீபத்தில் மேற்படி இணையத்தில் விமர்சனப் பகுதியில் ‘அப்பா… வேணாம்ப்பா’ என்கிற ஒரு படம் நம்மை பெரிதும் கவர்ந்தது. டைட்டிலே வித்தியாசமாக இருந்ததால் விமர்சனத்தை படிக்க துவங்கிய நாம் படிக்க படிக்க பிரமித்து போய் விட்டோம்.

அதை தயாரித்து, இயக்கி, நடித்திருப்பவர் வெங்கட்டரமணன் என்னும் ஒன் மேன் ஆர்மி.

கோடி கோடியாக செலவு செய்து எடுக்கப்படும் திரைப்படங்கள் இந்த சமுதாயத்திற்கு நச்சுக்களையும் எச்சங்களையும் விட்டுவிட்டு போக, பத்து லட்ச ரூபாயில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம், தமிழகத்தில் பெருகி வரும் மதுப்பழக்கத்திற்கு எதிராக ஒரு மிகப் பெரிய கிருமிநாசினியாக மாறி ஒரு மகா யுத்தத்தையே அதன் மீது தொடுத்திருக்கிறது என்றால் மிகையாகாது.

படத்தை நாம் இன்னும் பார்க்க வில்லை என்றாலும், அந்த விமர்சனத்திலேயே அதன் தரம் நன்கு புரிந்தது. சினிமா போன்ற ஒரு மாஸ் கமர்சியல் மீடியாவில் இது போன்ற நல்ல கருத்துக்களை சொல்லவும் இன்னும் ஆட்கள் இருக்கிறார்கள் அதுவும் இத்தனை குறைந்த செலவில் என்பது நம்மை பொறுத்தவரை மிகப் பெரிய ஆறுதல்! அதிசயம்!! எனவே அதன் இயக்குனர் கம் தயாரிப்பாளரை அழைத்து கௌரவிப்பது தானே முறை?

ரைட்மந்த்ரா விருதுகள் 2014 ஆம் ஆண்டுக்கான பட்டியல் ஏற்கனவே நம் தளத்தில் வெளியிடபட்டு விட்டாலும் மது ஒழிப்புக்கான ரைட்மந்த்ரா மகாத்மா காந்தி விருதை இருவருக்கு பகிர்ந்து கொடுப்பது ஒன்றும் குற்றமல்லவே…? (மற்றவர் செய்யாறை சேர்ந்த கல்லூரி மாணவர் திரு.ஆனந்த்). இப்படி ஒரு துணிச்சலான முயற்சியை செய்தவரை கௌரவிப்பதற்கு அடுத்த ஆண்டு வரை காத்திருக்கவேண்டுமா என்ன? கௌரவமனாது உரிய நேரத்தில் வந்தால் தானே அதற்கு சிறப்பு?

மேலும் இந்த திரைப்படம் மிகப் பெரிய விருதுகளையும் பாராட்டுக்களையும் குவிக்கப்போவது திண்ணம். எனவே இந்த படத்தின் இயக்குனர் கம் தயாரிப்பாளர் திரு.வெங்கட்டரமணன் அவர்களை நமது விழாவிற்கு அழைத்து முதல் விருதும் சான்றிதாழும் கொடுக்க முடிவு செய்தோம்.

தொடர்ந்து திரு.வெங்கட்டரமணன் அவர்களை தொடர்புகொண்டு அவரது படைப்பை பற்றி சிலாகித்துவிட்டு அவருக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொண்டு நமது தளத்தை பற்றியும் நமது விருதுகள் வழங்கும் விழா பற்றியும் குறிப்பிட்டு நிகழ்ச்சிக்கு அவசியம் வந்திருந்து நமது கௌரவத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டோம்.

அதை அன்போடு ஏற்றுகொண்ட திரு.வெங்கட்டரமணன் இந்த சாமானியர்கள் சாதனையாளர்களுக்கு அளிக்கும் விருதை பெற தனது துணைவியாரோடு வந்திருந்தார்.

நிகழ்ச்சிக்கு குறித்த நேரத்திற்கு வந்து நம்மை சிலிர்க்க வைத்த திரு.வெங்கட்டரமணன் விருதைப் பெற்றுக்கொண்டு நிகழ்ச்சி முடியும் வரை அமர்ந்து அனைத்தையும் ரசித்தார்.

அவரைப் பற்றியும் அவரது மகத்தான முயற்சி பற்றியும் குறிப்பிட்டு, அவரை விருது பெற அழைத்தோம். நமது நிகழ்ச்சிக்கு எவரும் எதிர்பாராமல் சிறப்பு விருந்தினராக வந்திருந்த ‘அமர்சேவா சங்கம்’ திரு.ராமகிருஷ்ணன் அவர்களின் பொற்கரங்களால் இந்த விருதை பெறும் பாக்கியம் திரு.வெங்கட்டரமணன் அவர்களுக்கு கிடைத்தது.

நம் தேசத் தந்தை பெயரில் வழங்கப்பட்ட விருது, என் வாழ்வில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை!

ரைட்மந்த்ரா விருதை பெறுவது பற்றி திரு.வெங்கட்டரமணன் கூறியதாவது : “டிசம்பர் 7 ஆம் தேதி ‘அப்பா..வேணாம்ப்பா’ படம் வெளியான நிலையில் நல்ல விமரிசனங்களுடன் பாராட்டுக்களையும் எல்லா தரப்பினரிடமும் பெற்றுள்ளது. நான் அப்படி திளைத்திருந்த சமயத்தில் தான் ரைட்மந்த்ரா சுந்தர் அவர்கள் தொலைபேசியில் அன்பாக என்னை அழைத்து எனக்கு ஒரு விருது காத்திருப்பதாக தெரிவித்தார். ஒரு படைப்பாளி என்கிற முறையில் நான் பெற்ற மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. விழா அரங்கிற்கு சென்றபோது தான் மகாத்மா காந்தி பெயரிலான விருது என்பதை அறிந்தேன். ஒரு நல்ல செயலைச் செய்தவுடனேயே அதற்கான அங்கீகாரத்தை ரைட்மந்த்ரா.காம் அளித்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி. ஏனென்றால் நல்ல மனிதர்களின் கூட்டம் தான் மேன்மேலும் நம்மை வாழ்வில் முன்னோக்கி கூட்டிச் செல்லும். அந்த விருது அதுவும் நம் தேசத் தந்தை பெயரில் வழங்கப்பட்ட விருது, என் வாழ்வில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்ல. ரைட்மந்த்ரா தளத்திற்கும் அதன் ஆசிரியருக்கும் அங்கு அரங்கில் என்னை உற்சாகப்படுத்திய ரைட்மந்த்ரா வாசகர்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள் + நன்றிகள். உங்கள் பணி வளரட்டும். என்னால் முடிந்த வரை உங்கள் அனைவருடனும் இணைந்து மகிழ்ச்சியாக பணியாற்றுவேன்.”

இப்படி ஒரு திரைப்படம் எடுக்கவேண்டும் என்று எப்படி தோன்றியது?

“இப்படி ஒரு திரைப்படம் எடுக்கவேண்டும் என்று எப்படி அவருக்கு தோன்றியது?’ என்று சொல்லச் சொல்லுங்கள் என்று ராமகிருஷ்ணன் அவர்கள் கேட்டுக்கொண்டதும், திரு.வெங்கட்டரமணன் கூறியதாவது : சாலைகளில் அங்கு இங்கு என்று எங்கு பார்த்தாலும் மது போதையில் ஆடை விலகியது கூட தெரியாமல் விழுந்து கிடப்பவர்களை பார்த்து வேதனைப்படுவேன். அந்த வழியாக செல்லும் பெண்கள் எந்தளவு அதைக் கண்டு முகம் அருவருப்படைகிறார்கள் சுழிக்கிறார்கள் என்பதையும் கண்டேன். அதை தொடர்ந்து சுமார் 5 வருடங்களுக்கு முன் மதுவின் தீமைகள் பற்றி டாக்குமெண்டரி எடுக்க முடிவு செய்த போது தான் குடிப்பழக்கம் என்பது சமுதாயத்தில் புரையோடிபோயிருக்கும் எவ்வளவு பெரிய ஒரு நோய் என்பதை புரிந்துகொண்டேன். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போல் குடி நோயால் பாதிக்கப்பட்டதால் தான் அதை விட முடியாமல் அவர்கள் குடித்து சீரழிகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டபின், குடியால் வாழ்க்கையை இழந்த பல குடிநோயாளிகளை சந்தித்து, அவர்கள் அனுபவங்களைக் கேட்டேன். அவர்களின் மனைவி, அண்னன், அப்பா போன்றவர்களையும் சந்தித்து அவர்களின் எண்ணங்களைக் கண்டறிந்தேன். அவர்கள் குடியை விட்டபின்னும் கூட சமுதாயத்தினால் குடிகாரர்களாகவே பார்க்கப்படுகிறார்கள். மனைவி மற்றும் பெற்றோர் கூட அவர் செய்த கலாட்டாக்களை நினைத்து அவருக்கு ஆதரவு தராமல் வெறுத்து துரத்துகிறார்கள். இதனால் திருந்தியது பலனின்றி அவர்கள் மீண்டும் குடிக்க தள்ளப்படுகிறார்கள். குடிப்பழக்கத்திலிருந்து விடுபட்டவர்களை இந்த சமூகம் அரவணைக்க வேண்டும். இதெல்லாம் தான் என்னை இந்த திரைப்படத்தை எடுக்கத் தூண்டியது. மேலும் தமிழ்நாட்டில் மேலும் மேலும் பலர் குடிநோயாளிகளாக மாற வாய்ப்பு அதிகம் உள்ளது. ஒரு மனிதன் குடிப்பதனால் அவன் மட்டும் இல்லாமல் அவனைச் சார்ந்துள்ள குடும்பமே பாதிக்கப்படுகிறது. அதனால் தான் அதை ‘குடும்ப நோய்’ என்கிறார்கள். இதே நிலை தொடர்ந்தால் சமுதாயத்தில் ஆண்கள் குடித்து நோய்வாய்ப்பட்டு இறப்பர். பெண்கள் கணவனை இழப்பார்கள். குழந்தைகள் இனி தாத்தாக்களையே பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்படும். இது மிகவும் கொடியது. இந்த திரைப்படத்தில் எப்படி ஒரு குடிநோயாளி , சரியான சிகிச்சையால் முன்னேறி மறுபடி குடும்பத்துடன் சேர்ந்து மகிழ்ச்சியாக வாழலாம் என்பதை படம் பிடித்துள்ளோம். அவர்களால் திருந்தி வாழமுடியும் என்று நம்பிக்கை அளிக்கவே இந்த முயற்சியை மேற்கொண்டேன்.” என்றார்.

நிகழ்ச்சியின் இறுதியில் தனது துணைவியாரை நம்மிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு ஒரு படைப்பாளியாக இந்த விருது தனக்கு எவ்வளவு பெரிய ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுத்திருக்கிறது என்பதை விளக்கினார். மேலும் திரு.ராமகிருஷ்ணன் போன்றோர் கைகளில் விருதை பெற்றது உண்மையில் மிகப் பெரிய பாக்கியமாக கருதுவதாக கூறினார்.

வரும் வெள்ளிக்கிழமை முதல் விருகம்பாக்கம் தேவி கருமாரி திரையரங்களில் ‘அப்பா…வேணாம்பா’ திரைப்படம் தினமும் பகல் காட்சி திரையிடப்படவிருக்கிறது. படத்தை பார்க்க நம்மை அழைத்திருக்கிறார் திரு.வெங்கட்டரமணன். அந்த அனுபவத்தை வேறொரு பதிவில் பார்க்கலாம்.

நீங்களும் உங்கள் நட்பு மற்றும் உறவு வட்டங்களில் இந்த் திரைப்படத்தை பற்றி கருத்துக்களை விதைத்து ஒரு நல்ல தரமான படைப்பை பலர் பார்க்க வழி செய்யுங்கள்.

இதுவும் கூட ஆன்மிகம் தான்! ஒரு வகையில் வழிபாடு தான்!!

(பின் குறிப்பு : தமிழில் பெயரை தாங்கி வெளிவரும் சிறந்த படங்களுக்கு வரிவிலக்கு உண்டு. ஆனால் மதுவின் தீமையை சொன்னதாலோ என்னவோ அருமையான பெயரைகொண்டிருந்தும் இந்த படத்துக்கு அரசின் வரிவிலக்கு கிடைக்கவில்லை. தியேட்டரும் கிடைக்கவில்லை. ஒவ்வொன்றாக இதுவரை கிடைத்தது மொத்தம் மூன்றே மூன்று தியேட்டர்கள் தான். இது தாண்டா தமிழ்நாடு! தமிழன் என்று சொல்லடா… தள்ளாடியபடி நில்லடா!!)

-சுந்தர்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தமிழ் தாய் புரொடக்சன்ஸ் தயாரிக்கும் “ விருதாலம்பட்டு “

தமிழ் தாய் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பில் எம்.கனகராஜ், கே.எம்.வெங்கடாஜலபதி இருவரும் இணைந்து தயாரிக்கும் படம்                      “விருதாலம்பட்டு” இந்த படத்தில் கதாநாயகனாக ஹேமந்த்குமார் நடிக்கிறார். கதாநாயகியாக சான்யா...

Close