துணிச்சலுக்கான சர்வதேச விருதுக்கு இந்திய பெண் தோ்வு

துணிச்சல் மிக்க பெண்களுக்கு வழங்கப்படும் சர்வதேச உயரிய விருது இந்த ஆண்டு இந்திய பெண் லட்சுமிக்கு வழங்கப்படுகிறது. ஆசிட் தாக்குதலில் பாதிக்கப்பட்ட லட்சுமியின் பெயரை இந்த விருதுக்காக அமெரிக்கா தேர்வு செய்துள்ளது.

இந்த விருதை அமெரிக்க முதல் பெண்மணி மிச்செல் ஒபாமா வழங்க உள்ளார். 2007ல் உருவாக்கப்பட்ட இந்த விருது, மனித உரிமை, பெண்கள் சமஉரிமை, சமுதாய முன்னேற்றம் போன்றவற்றிற்காக துணிச்சலுடன் போராடும் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

உலக அளவில் பெண் தலைவர்களை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படும் ஒரே சர்வதேச விருது இது மட்டுமே. லட்சுமியுடன் சேர்ந்து ஆப்கானிஸ்தான், பிஜி, ஜியார்ஜியா, சவூதி அரேபியா, கவுதமாலா, உக்ரைன், மாலி, தஜிகிஸ்தான், ஜிம்பாப்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண்களும் இவ்விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

இதுகுறித்து வாஷிங்டன் மாகாண செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கடந்த 2005-ஆம் ஆண்டு லட்சுமி என்ற பெண் புதுடெல்லியின் பரபரப்பான கான் மார்க்கெட் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தபோது அவருடைய நண்பரின் சகோதரர் ஒருவர், அவர்மீது ஆசிட் வீசியதில் படுகாயமடைந்தார். அதில் அவருடைய முகம் நிரந்தரமாக விகாரமானது.

பொதுவாக ஆசிட் தாக்குதலில் பாதிக்கபட்டவர்கள் தங்களது இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடிவதில்லை. அவர்கள் பொது இடங்களுக்கு அல்லது வேலைக்கு செல்லும்போது முகத்தை மறைத்தே செல்கின்றனர். ஆனால் லட்சுமி அப்படி மறைக்கவில்லை.

ஆசிட் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வர அதற்கு எதிரான இயக்கத்தை முன்னின்று நடத்தினார். இதுதொடர்பாக தேசிய தொலைக்காட்சிகளில் அடிக்கடி தோன்றிய அவர், சட்டவிரோதமாக ஆசிட் விற்கப்படுவதை தடுக்க 27 ஆயிரம் கைழுத்துக்கள் அடங்கிய புகார் மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார்.

ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வு, அவர்களுக்கான இழப்பீடு குறித்தும் ஆசிட் தாக்குதலை தடுப்பது பற்றியும் அவரே முன்னின்று இந்தியா முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார்.

இதையடுத்து ஆசிட் விற்பனையின் ஒழுங்குமுறைகளை உடனடியாக அமல்படுத்தவும், மக்களவையில் இதுகுறித்த விவாதத்தை நடத்தவும் மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவி்ட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டுக்கான விருது, டெல்லியில் ஓடும் பேருந்தில் கற்பழிக்கப்பட்ட நிர்பயாவுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
யூ.பி.எஸ்.சி தோ்வில் மாற்றம்: வயது வரம்பு மேலும் 2 ஆண்டு தளர்வு

சமீபத்தில், யூ.பி.எஸ்.சி. தோ்வில் அனைத்துப் பிரிவினரும் 2 முறை கூடுதலாக தேர்வு எழுதுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. மேலும் வயது வரம்பு தளர்வு குறித்த குழப்பத்தை...

Close