‘நான் கூப்பிடாமலேயே சாப்பிட வந்துர்றாங்க….’ -சக நடிகர்களை கேவலப்படுத்திய ஆர்யா
‘ரோமியோ’ என்கிற இமேஜ் வளர வளர ‘சாமியோவ்’ என்று கையெடுத்துக் கும்பிட்டு கைநிறைய சம்பளம் கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். அதனாலேயே தனது மன்மத டெக்னிக்கை மணி ப்ளான்ட் போல வளர்த்து வருகிறார் ஆர்யா.
பிக்கப் டிராப் நடிகர் என்று ஒரு மேடையில் வைத்து பார்த்திபன் புலம்புகிற அளவுக்கு போய்விட்டது இவரது அட்ராசிட்டி. சக நடிகர்கள் அத்தனை பேரும் ஆர்யாவை பார்க்கிற பார்வையே தனி. மாப்ளே… மச்சம்டா உனக்கு என்று நேரடியாகவே புலம்புவதற்கும் தயங்குவதில்லை அவர்கள். ஆர்யாவின் இந்த ஒரு குவாலிட்டிக்காகவே அவரோடு நட்பு வைக்க அலைகிறார்கள் யூத் நடிகர்கள். அப்படி தன்னிடம் ஒட்டிக் கொள்ளும் இவர்களுக்கு அவ்வப்போது பிரியாணி பார்ட்டியும் வைத்து கலக்குகிறார் ஆர்யா. ஆனால் இந்த பிரியாணியில் இத்தனை நாளும் லெக்பீசுடன் அன்பும் அரவணைப்பும் கலந்திருந்ததாக சந்தோஷப்பட்ட இவர்களுக்கு சரியான பீடாவை கொடுத்து அந்த எண்ணத்தை செரிக்க வைத்துவிட்டார் ஆர்யா. எப்படி?
அண்மையில் ஒரு டி.வி நிகழ்ச்சியில் ‘கடைசியா யாருக்கு பிரியாணி போட்டீங்க?’ என்ற இவரிடம் தொகுப்பாளர் கேட்க, ‘நஸ்ரியா’ என்றார் ஆர்யா. அதோடு விட்டிருந்தால் ஓ.கே. ‘நான் போடுற பிரியாணி விருந்துக்கு நடிகைகளை மட்டும்தான் அழைப்பேன். நடிகர்களை கூப்பிடவே மாட்டேன். அப்படியும் மீறி வர்ற நடிகர்கள் யாரும் அவங்களா கேள்விப்பட்டு வர்றவங்கதான்’ என்றார்.
அட யூத்துகளா… இதுக்கு பிறகும் பிரியாணியில லெக்பீஸ் தேடுவீங்க…?