‘யாருகிட்டேயும் கையேந்தாதீங்க…’ -முதல்வரின் நல்லெண்ணத்தை மீறி நடைபெறும் வசூல் வேட்டை?
இந்திய சினிமாவின் நுற்றாண்டுவிழா கொண்டாட்டம் களை கட்டி வருகிறது. அதே நேரத்தில் சர்ச்சைகளுக்கும் குறைவில்லை. இதையெல்லாம் பொருட்படுத்தாமல் முதல்வர் ஜெயலலிதா இந்த விழாவை சிறப்பாக நடத்துவதற்காக பத்து கோடி ரூபாயை வழங்கியிருக்கிறார். நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற வேண்டும் என்கிற நோக்கம் மட்டுமல்ல, இதையே காரணம் காட்டி யாரும் யாரிடமும் வசூல் வேட்டையில் ஈடுபட்டுவிடக் கூடாது என்கிற நல்லெண்ணத்திலும்தான்.
ஆனால் அவர் நினைத்தது நடக்கிறதா என்றால் அதுதான் இல்லை. மதுரை, கோவை, திருச்சியில் உள்ள தியேட்டர்களை குறி வைத்து வசூல் வேட்டையை நடத்தி வருகிறார்களாம் சிலர். அதுவும் ஆர்.எம்.அண்ணாமலை, ரோகினி பன்னீர்செல்வம் தலைமையில் இயங்கி வரும் திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் பெயரை சொல்லிக் கொண்டுதான் இந்த வசூல் வேட்டை நடைபெறுவதாக குமுறுகிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள்.
ஏ.சி வசதியுள்ள தியேட்டர்கள் என்றால் பத்தாயிரமும், ஏ.சி இல்லாத தியேட்டர்கள் ஏழாயிரமும், நகரத்தை விட்டு உள்ளடங்கி இருக்கும் தியேட்டர்கள் மூவாயிரமும் தர வேண்டும் என கேட்டு நச்சரிக்கிறார்களாம் மாவட்ட திரையரங்க சங்கத்தின் பொறுப்பாளர்கள்.
விழா சிறப்பா நடக்கணும்னா நீங்க கொடுத்துதான் ஆகணும் என்று இவர்கள் சொல்வதற்கும், முதல்வரின் வருகை சிறப்பாக அமைவதற்கும் என்ன சம்பந்தம் இருக்கப் போகிறது? பெயரை கெடுக்கும் பெருச்சாளிகளை அரசு கண்டுபிடிக்குமா, வசூல் நிறுத்தப்படுமா?
ஆவலோடு காத்திருக்கிறார்கள் தியேட்டர்காரர்கள்…