யூ.பி.எஸ்.சி தோ்வில் மாற்றம்: வயது வரம்பு மேலும் 2 ஆண்டு தளர்வு
சமீபத்தில், யூ.பி.எஸ்.சி. தோ்வில் அனைத்துப் பிரிவினரும் 2 முறை கூடுதலாக தேர்வு எழுதுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. மேலும் வயது வரம்பு தளர்வு குறித்த குழப்பத்தை தீர்க்க, விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்திய குடிமைப் பணிகளுக்கான யூ.பி.எஸ்.சி. தேர்வுகளை இந்த ஆண்டு முதல் அனைத்துப் பிரிவினரும் கூடுதலாக இரண்டு முறை எழுதலாம் என்றும், இரண்டு வருட வயது தளர்வு வழங்கப்படவுள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து மத்தியப் பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
புதிய விதிகளின்படி, யூபிஎஸ்சி தேர்வை அதிகபட்சமாக பொதுப்பிரிவினர் 6 முறை (32 வயது வரை) எழுதலாம். எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வு எழுத முடியும். இவர்களுக்கான அதிகபட்ச வயதுவரம்பு 35 வயதிலிருந்து 37 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஓபிசி பிரிவினர் 35 வயது வரை 9 முறை எழுதலாம். ஓபிசி மற்றும் பொதுப்பிரிவை சேர்ந்த மாற்றுதிறனாளிகள் 45 வயது வரை 9 முறை எழுதலாம். எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு தோ்வு வாய்ப்புகளில் வரம்பு இல்லை. அதே நேரம் அதிகபட்ச வயது வரம்பு 45-லிருந்து 47-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விதிகளின்படி, நடைமுறைக்கு வரும் முதன்மைத்தோ்வு வரும் ஆகஸ்டு மாதம் 24ந்தேதி நடைபெற உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த புதிய அறிவிப்பு, பொது பிரிவினர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.