விக்ரம் போற ரூட்டு சரியா?
முயல் ஆமை கதைதான் நடந்து கொண்டிருக்கிறது கோடம்பாக்கத்தில். ‘நம்மள ஒரு பய முந்த முடியாது’ என்று நம்பி அசால்ட்டாக வண்டி ஓட்டிய அத்தனை ஹீரோக்களுக்கும் இப்போது தசைநார் பிடிப்பு. அதற்கு காரணமாக இருப்பவர்கள் நேற்று பெய்த மழையில் இன்று குடை ரிப்பேர் கடையை திறந்தவர்கள்தான்! அவர்கள் யார் யார் என்று நாம் சொல்லத் தேவையில்லை. அது சிவகார்த்திகேய சேதுபதியாய விமாலதித்யன்கள்தான் என்பதை ரசிகர்களே சுலபமாக யூகித்துவிடலாம்.
இனிமேலும் அவர்களை வளர விட்டால், நாம் உளரு வாயர்களாகி ஓட்டாண்டியாக திரிய வேண்டியதுதான் என்று உணர்ந்து கொண்ட சிலர் சிலுப்பிக் கொண்டு கிளம்பியிருக்கிறார்களாம். முதலில் கிளம்பியிருக்கிறார் விக்ரம். தற்போது -ஐ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் அவர், இந்த படம் வெளியான பின்பு சுமார் ஐந்து படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். ஐந்தும் கமர்ஷியல் குத்து என்கிறார்கள்.
இவரை இயக்க ஒப்புக் கொண்டிருக்கும் அதிரடி இயக்குனர்களில் தரணி முதல் வரிசையில் நிற்கிறார். தொடர்ந்து ஹரி இருக்கிறார். இவ்விரு படங்களையும் முடித்துவிட்டு பேரரசுக்கு கூட படம் நடித்து தருகிற துணிச்சலுக்கு வந்துவிட்டாராம் விக்ரம்.
இந்த நேரத்தில் பாலாவும் இவரை அழைக்க, நண்பா… நான் மூணு மாசத்துக்கு ஒரு படம்னு கணக்கு பண்ணி அடிக்கப்போறேன். அதுவும் சூடான மசாலா படமா நடிக்கப் போறேன். இந்த ஸ்பீட்ல நான் இருக்கும் போது நம்ம கூட்டணி சரிப்படும்னு நினைக்கிறே…? என்று விக்ரம் கேட்க, பாலா லேசாக சிரித்துக் கொண்டே நடையை கட்டியதாக கேள்வி.
விக்ரம் ரூட்டு சரியாதான் இருக்கா? புரியலையே!