2005-க்கு முன்னுள்ள நோட்டுகளை எந்த வங்கியிலும் மாற்றலாம்: ஆர்பிஐ

2005-ம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. 2005-ம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட நோட்டுகளில், பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்படவில்லை. எனவே, அதில் கள்ள நோட்டுகள் அச்சிட்டு வெளியிடப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

எனவே, கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், 2005-ம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அப்படி மாற்றிக்கொள்வதற்கான கால அவகாசம், ஜூன் 30-ந்தேதி வரை இருந்தது.

இந்நிலையில், இந்த கால அவகாசம் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி கூறியதாவது:-

2005-ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்வதற்கான கால அவகாசம் ஜனவரி 1-ந்தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எந்த வங்கியிலும் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம். வாடிக்கையாளரோ, வாடிக்கையாளர் அல்லாதவரோ யாராக இருந்தாலும், ரூபாய் நோட்டை மாற்றி கொடுக்குமாறு வங்கிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

ஒருவர் எத்தனை நோட்டுகளையும் மாற்றி கொள்ளலாம். அதற்கு கட்டுப்பாடு கிடையாது. அதே சமயத்தில், 2005-ம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம். தயக்கமின்றி பிறரிடம் பெற்றுக்கொள்ளலாம். அவை தொடர்ந்து செல்லுபடி ஆகும்.

மேலும், வங்கிகள், 2005-ம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை கவுண்ட்டர் மூலமாகவோ அல்லது ஏ.டி.எம். மூலமாகவோ வினியோகிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளோம். அந்த நோட்டுகளை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளோம். பொதுமக்களுக்கு எந்த அசவுகரியமும் ஏற்படக்கூடாது என்பதற்காக, ரூபாய் நோட்டு வாபஸ் பெறும் பணியை தொடர்ந்து கண்காணித்து வருவோம்.

இவ்வாறு ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி 24-ந்தேதி தொடங்குகிறது

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், பிளஸ்-2 தேர்வு கடந்த 3-ந்தேதி தமிழ் முதல் நாள் தேர்வுடன் தொடங்கியது. 8¾ லட்சம் மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதி வருகிறார்கள். தமிழ்,...

Close