சத்தமில்லாமல் உதவி! ஆன்ட்ரியாவுக்கு ஒரு லைக்!

மழை நின்னுருச்சு. ஆனா தவள சப்தம் ஓயல என்பது போல, வெள்ளம் வடிந்த பின்பும் இன்னல் தீராமல் இறுமிக் கொண்டிருக்கிறது சென்னை. இன்னும் பல இடங்களில் சாக்கடை, கொசுக்கடி, கரன்ட் கம்பியில் ஈரம் என்று ஸ்தம்பித்துப் போன சென்னைக்கு, நம்பிக்கை மட்டும்தான் உயிர் இப்போது.
அரசை விட, கழகங்களை விட, கட்சிகளை விட, தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், நடிகர் நடிகைகளும் திரையுலக அமைப்புகளும் செய்த தொண்டு சொல்லில் அடங்காது. எழுபது வயதிலும் இளையராஜா, இளங்கன்றுகள் சித்தார்த், விஷால், கார்த்தி, இயக்குனர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், பெப்ஸி, மயில்சாமி, ஆர்.ஜே.பாலாஜி என்று அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி சொல்லி சொல்லி மாய்ந்து போகிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள். இந்த நேரத்தில்தான் சத்தமில்லாமல் வந்து சந்தடியில்லாமல் உதவி செய்துவிட்டு போயிருக்கிறார் நடிகை ஆன்ட்ரியா.
இடுப்பளவு வெள்ளம். ஒருவேளை சாப்பாட்டுக்கு வழியில்லே என்று தவித்த குடிசைகளுக்கு நடுவே, வெண்ணிலா போல நீந்தி வந்தாராம் ஆன்ட்ரியா. தன்னுடன் கொண்டு வந்திருந்த ஏராளமான உணவுப்பொருட்கள், பெட்ஷீட், பாய், துணிமணிகள் என்று தன்னால் இயன்றளவுக்கு உதவிவிட்டு சென்றதாக சந்தோஷப்படுகிறது சாலிகிராமத்தின் ஒரு பகுதியான குலசேகரபுரம்!
முகம் காட்லேன்னா என்ன? தேடி கண்டுபுடிச்சு பாராட்டுவோம்ல!
