தொடரும் நெருக்கடி… விழி பிதுங்கும் ஐ! 15 கோடி கடனுக்காக ஜனவரி 30 வரை படத்தை வெளியிடவும் தடை!
‘ஜனவரி 15 பொங்கல் வெளியீடு’ என்கிற அறிவிப்புடன் இன்றைய நாளிதழ்களில் ஐ பரபரப்பு துவங்கியது. ஆனால் காலையிலிருந்த கலகலப்பை பிற்பகலில் தொலைத்திருந்தது அதே ஐ டீம்! வேறொன்றுமில்லை. பிக்சர் ஹவுஸ் என்ற நிறுவனம் ‘எங்களுக்கு கடனாக தர வேண்டிய பணத்தை தராமல் ஐ படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் இழுத்தடிக்கிறார். எனவே அவரது ஐ படத்தை தடை செய்ய வேண்டும்’ என்று நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, ‘ஐ’ படம் வெளியிடுவதற்கு 3 வாரம் தடை விதிக்கிறேன். வாங்கிய கடனை ஆஸ்கர் ரவிச்சந்திரன் விரைவில் திருப்பித்தர வேண்டும். ஜனவரி 30-க்குள் ஆஸ்கர் ரவிச்சந்திரன் பதில் தர வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். சுமார் 15 கோடி ரூபாயை பிக்சர் ஹவுசுக்கு தர வேண்டியிருக்கிறதாம் ஆஸ்கர்.
இந்த நிறுவனம் மட்டுமல்ல, இவரைப்போல இன்னும் சிலரும் தங்களுக்கு வர வேண்டிய கடனுக்காக கோர்ட் படியேற காத்திருக்கிறார்களாம். எல்லாருக்கும் அசலும் வட்டியுமாக பணத்தை செட்டில் செய்யாமல் ஐ திரைக்கு வராது போலிருக்கிறது. இந்த பொங்கல் தேதியை விட்டால், அதற்கப்புறம் இப்படியொரு அருமையான ரிலீஸ் தேதி அமையாது என்று உணர்ந்திருக்கும் ஆஸ்கர் ரவிச்சந்திரன், பிரச்சனையை எளிமையாக தீர்க்கும் வேலையில் கடுமையாக ஈடுபட்டு வருகிறார்.
இதற்கிடையில் படத்திற்கு யு சர்டிபிகேட் வேண்டும் என்று மேல்முறையீடு செய்திருந்தார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். அங்கிருந்து வந்த பதிலும் அவ்வளவு திருப்தியாக இல்லை. இந்த படத்திற்கு ஏன் யு/ஏ கொடுக்கப்பட்டது? ஏ அல்லவா கொடுத்திருக்க வேண்டும் என்று பதிலளித்தார்களாம் அங்கே.