அஜீத் தந்த ஆச்சர்யம்! திக்குமுக்காடிய அப்புக்குட்டி என்கிற சிவபாலன்
யாரையும் அவர்களே நினைத்துப்பார்க்க முடியாத விதத்தில் ஆச்சர்யமூட்டி பார்ப்பதில் அஜீத்தை விட்டால் ஆளேயில்லை. தினந்தோறும் படப்பிடிப்பில் யாரையாவது கவராமல் போவதேயில்லை அவர். அஜீத் பட ஷுட்டிங்கில் பணியாற்றிய எவரை கேட்டாலும், அஜீத் குறித்த ஒரு நல்ல சம்பவம் வைத்திருப்பார். அப்படியொரு அனுபவமும் சம்பவமும் இப்போது அப்புக்குட்டி வாயால் வருவதில் ஆச்சர்யமில்லைதான்.
அப்படியென்ன செய்துவிட்டார் அஜீத்? அதை அப்புக்குட்டி என்கிற சிவபாலன் வாயால் கேட்டால்தான் தெரியும்.
‘ வீரம் படப்பிடிப்பின் போது அஜீத் சார் என்னிடம் ‘தம்பி எல்லா படங்களிலும் ஒரே வித தோற்றத்தில் வருவது உங்களது வளர்ச்சிக்கு தடையாக இருக்கும். முடிந்த வரை படத்துக்கு படம் தோற்றத்தை மாற்ற பாருங்கள். கிராமிய படங்களை தவிர நகரத்தில் நடக்கும் கதைகளிலும் நடிக்கும் வகையில் தோற்றத்தில் மாற்றம் வேண்டும்’ என வலியுறுத்தினார்.
‘என்னை யார் சார் இப்படி எல்லாம் மாத்துவாங்க , யார் சார் படம் பிடிப்பாங்க?’ என்று நானும் கேட்டேன். புன்னகையோடு விடைப் பெற்றவர் சில நாட்களுக்கு முன்னர் என்னை அழைத்து ‘29 ஆம் தேதி நீங்க ப்ரீயா இருந்தா சொல்லுங்க’ என்றார். ‘நானும் வரேன்’னு சொன்னேன் . எங்கே , என்ன , எது எனக் கேட்காமல். அவர் சொன்ன இடத்துக்கு வந்ததுக்கு அப்புறம் தான் தெரிஞ்சிது , அவர் என்னை வைத்து புகை படம் எடுக்க போறார்னு. அதை விட ஆச்சரியம் என்னனா , என் உருவ அமைப்புக்க ஏற்ப கச்சிதமாக தைக்க பட்ட உடைகள், உயர்தரமான அணிகலன்கள்,சிறந்த ஒப்பனை சாதனங்கள், எனக்காகவே வரவழைக்க பட்ட பிரத்தியேக ஒப்பனையாளர்கள் என பிரமாத படுத்தி இருந்தார்.
ஆச்சரியத்தில் வாயை பிளந்தவன் இன்னும் மூடவே இல்லை. தவிர எனது இயற் பெயரைக் கேட்டு தெரிந்துக் கொண்ட அவர் அந்த பெயரான சிவ பாலன் என்றே என்னை அழைத்தார். மற்றவர்களையும் அவ்வாறே அழைக்குமாறு கூறினார். இனிமேல் நானும் எனது பெயரை சிவபாலன் என்கிற அப்புக்குட்டி.என்றே அழைக்க படுவதை விரும்புகிறேன்.
ஒரு கை தேர்ந்த புகைப்பட நிபுணர் போல் அவர் காட்டிய ஈடுபாடும் , தொழில் நேர்த்தியும் என்னை பரவசம் ஊட்டியது.. புகைப்படங்கள் எடுக்கப்பட்ட பிறகு அதைப் பார்த்த எனக்கு பேச்சே வரவில்லை. இது எனக்கு கிடைத்த மிக பெரிய பாக்கியம் .இது என்னால் மறக்க முடியாத ஒரு நாளாகும் என தெரிவித்தார் சிவபாலன் என்கிற அப்பு குட்டி.