நான் சாக மாட்டேன்! அஜீத் ஆவேசம்….
முன்பு போல் இல்லை அஜீத். ஒரு டைரக்டர் ஒரு லைன் சொன்னால், சரி… அதை டெவலப் பண்ணிட்டு வாங்க என்பார். அந்த டெவலப் எந்த லட்சணத்தில் இருந்தாலும், பொறுத்துக் கொண்டு ஷுட்டிங் கிளம்பிவிடுவது கூட சமயங்களில் அவரது வழக்கமாக இருந்தது. ஆனால் இப்போது?
கதை விவாதத்திலும் பங்கேற்கிற அளவுக்கு தன் படத்திற்காக மெனக்கெட ஆரம்பித்திருக்கிறார் அவர். அப்படிதான் கவுதம் மேனனுடன் ‘என்னை அறிந்தால்’ படத்தின் கதை விவாதத்தில் பல நாட்கள் பங்கேற்றாராம். மெல்ல மெல்ல வளர்ந்தது கதை. ஆனால் க்ளைமாக்ஸ் மட்டும் முடிவாகவில்லை. அதை ஷுட்டிங் முடியுற நேரத்தில் எடுத்துக்கலாம் என்று சமாதானம் சொல்லிவிட்டு அஜீத்தோடு ஷுட்டிங் கிளம்பிவிட்டார் கவுதம்.
அப்புறம்தான் அந்த க்ளைமாக்ஸ் என்னவென்று தெரியவந்ததாம் அஜீத்திற்கு. படத்தின் இறுதியில் அஜீத் சாவது போல காட்சியமைக்கப்பட்டிருந்தது. ‘என் ரசிகர்கள் அதை ஒப்புக் கொள்ள மாட்டாங்க. அதனால் க்ளைமாக்சை மாத்திருங்க’ இது அஜீத்தின் ஆசை. ‘இந்த கதைக்கு அப்படியிருந்தால்தான் அது நியாயமா இருக்கும்’ இது கவுதம் மேனன். இந்த இழுபறியில் பேச்சு வார்த்தைகள் முடியாமலே தொடர்ந்து கொண்டிருந்தது. அஜீத்தும் அதிருப்தியாக இருந்தார்.
எப்படியோ? கவுதம் சமாதானம் ஆகிவிட்டாராம். ரசிகர்களின் மனம் கோணாத அளவுக்கு க்ளைமாக்ஸ் அமைக்கப்பட்டிருக்கிறது.