எத்தனை பெத்துக்கலாம்னு நீங்களே சொல்லுங்க… நிருபர்களை மடக்கிய அமலாபால்!
நண்டும் காதலும் ஒன்றுதான். சற்றே எடை கூடினால் படக்கென்று வெளியே வந்துவிடும். அப்படிதான் அமலாபால் விஜய் காதல் விவகாரமும். பொத்தி பொத்தி வைத்திருந்த காதல் பொசுக்கென மீடியாவில் வெளிப்பட்டது. எப்படியோ…. அந்த கிசுகிசுக்களுக்கெல்லாம் மறுப்பு சொல்வதிலேயே பாதி நாளை கடத்தி வந்த விஜய், அமலாவோடு ஒற்றுப்புள்ளியாக சேர்ந்து இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளியும் வைத்துவிட்டார்.
நீங்கள்லாம் என்னோட சொந்தங்கள் என்பதால் முதல் அழைப்பு உங்களுக்குதான் என்று பிரஸ்சை கூட்டி, அழைப்பிதழ் விநியோகம் செய்தார். முதல் அழைப்பிதழ் கலைமாமணி, பிலிம் தகவல் பிதாமகரான பிலிம் நியூஸ் ஆனந்தனிலிருந்து துவங்கியது. அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் வழங்கினார்கள் அமலாவும் விஜய்யும். அதற்கு முன்பாகவே கேள்வி பதில் செஷன். இதை கவனமாக தவிர்த்துவிட விஜய் நினைத்தாலும், ஹனிமூன் எங்க வச்சுருக்கீங்க என்கிற சில்லி கொஸ்டீனோடு, சலங்கை கட்ட ஆரம்பித்தது பிரஸ்.
ஹைய்யோ… இன்னும் அந்தளவுக்கு யோசிக்கலைங்க. முதல்ல சைவம் ரிலீஸ் ஆகணும். அதற்கப்புறம்தான் அதெல்லாம். உதயநிதி சார் படத்தை வாங்கி ரிலீஸ் செய்கிறார்னாலும், அந்த படம் வெளியாகி நல்ல செய்தி வர்ற வரைக்கும் வேற எதையும் யோசிக்கறதா இல்ல. நேரம் குறைவா இருக்கு. எல்லாருக்கும் இனிமேதான் பத்திரிகை கொடுக்கணும்… என்றபடி மீண்டும் நடையை கட்ட முயல, அந்த இன்றியமையாத கொஸ்டீனை எங்கிருந்தோ வாசித்தார் யாரோ ஒரு புண்ணியவான். எத்தனை குழந்தை பெத்துக்கப் போறீங்க? என்பதுதான் அது.
முகமெல்லாம் வெட்கம் பிடுங்கி தின்ன, மைக்கை விட்டு அகன்றார் விஜய். ஆனால் அமலாபால் இன்…! ‘எத்தனை பெத்துக்கலாம்னு நீங்களே சொல்லுங்களேன். பெத்துக்குறோம். இப்படியெல்லாமா கேட்பீங்க?’ என்றார் சிரித்துக் கொண்டே. அதற்கப்புறம் யார் காதலை முதல்ல சொன்னீங்க? என்னெல்லாம் பரிசுகள் வாங்கி கொடுத்துகிட்டீங்க? என்பன போன்ற எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ்களால் அவர்கள் இருவரையும் திணற திணற கதற வைத்த பிரஸ்சிடமிருந்து சாதுர்யமாக தப்பி, இன்விடேஷன் விநியோகிக்க துவங்கினார்கள் தம்பதிகள்.
இவ்வளவு பரபரப்பிலும் அமலாபால் சொன்னதுதான் இயக்குனர்கள் கவனிக்க வேண்டிய முத்தான விஷயம். நல்ல கதையா இருந்தா திருமணத்திற்கு பிறகும் நடிப்பாராம்… அதுக்காக தாலி கட்டி முடிஞ்சதுமே, கதை சொல்றோம்னு கிளம்பிராதீங்க. சின்னஞ்சிறுசுங்க… ரெண்டு மாசம் போவட்டும்!