ஆவிப்படம் ஆயிரம் வருது… ஆனா இவங்க பயமுறுத்தல!
‘உனக்கென்ன வேணும் சொல்லு!’ இதுவும் ஒரு ஆவிப்படம்தான். ஆனால் கையிலெடுத்து கொஞ்ச வைக்கிற குழந்தை ஆவி. தனது வாழ்வில் நடந்த ஒரு அமானுஷ்யமான விஷயத்தை மையக்கருவாக எடுத்துக் கொண்டு இப்படத்தை இயக்கியிருக்கிறார் ஸ்ரீநாத் ராமலிங்கம். ஹாலிவுட் ஸ்டூடியோக்களில் டைரக்ஷன் பயின்றவர் என்ற கூடுதல் அட்ராக்ஷ்ன் இவருக்குண்டு.
குழந்தையில்லாத ஒருத்தி, குழந்தையை பறிகொடுத்த ஒருத்தி. இவ்விருவருக்கும் நடுவில் ஒரு குழந்தை. அது நிஜக்குழந்தையல்ல. ஆவி! போதும்… அதற்கப்புறமும் அவர் எப்படி முழுக்கதையையும் சொல்வார்? ஆனால் ஒரு உத்தரவாதம் கொடுத்தார். எவ்வளவோ பேய் படங்கள் வருது. ஆனால் அவையெல்லாம் ஏதாவது ஒரு விதத்தில் உங்களை அச்சுறுத்தும். ஆனால் எங்க பேய் உங்க அவ்வளவு பேரையும் ஒரு நெகிழ்ச்சியான மனநிலைக்கு கொண்டு போய்விடும் என்றார் ஸ்ரீநாத் ராமலிங்கம்.
ஒரு தயாரிப்பாளர் ஒரு படத்தை தயாரிக்கவும் ஆயிரம் காரணங்கள் இருக்கும். உனக்கென்ன வேணும் சொல்லு படத் தயாரிப்பாளருக்கு என்ன காரணம் இருக்கிறது தெரியுமா? தயாரிப்பாளர் என்.சண்முகசுந்தரம் சொல்லும்போது நிஜமாகவே மனசு லேசாகிவிடுகிறது. ‘இந்த படத்தை தயாரிக்கணும்னு பேசிகிட்டு இருக்கும்போது எங்க அப்பா தவறிட்டார். அதற்கப்புறம் அதிலிருந்து ரிலீவ் ஆகணும்ங்கறதுக்காகதான் இந்த படத்தின் ஷுட்டிங்கையே ஆரம்பிச்சோம். ஷுட்டிங் முடியறதுக்குள்ள எனக்கொரு அழகான பையன் பிறந்தான். அப்படியே எங்கப்பாவை உரிச்சு வச்ச மாதிரி. இந்த படம் வளர வளர நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்’ என்றார்.
படம் உருவான கதையிலிருக்கும் ஜீவன் படத்திலும் இருந்தால் ஹிட்டுதான்…!
Teaser link: https://www.youtube.com/watch?v=p0nrOamwdK8