என்னை யாரும் தொந்தரவு பண்ணல… ஹன்சிகா, ராய் லட்சுமி சண்டை பற்றி சுந்தர்சி
அருகிலிருக்கிற படம், பல ஹீரோக்களை ‘அட ங்கொப்புரானே…’ ஆக்கியிருக்கும்! ‘சுந்தர்சிக்கு மச்சம்டா’ என்று மற்றவர்கள் முனகுவதற்கு முன்… இந்த படத்திலிருக்கும் மூவருமே அவருக்கு ஜோடிகள் அல்ல! வினய்யும் இருக்கிறார் என்பதை நினைவில் கொள்க. ‘அரண்மனை ’ படத்தில் மிக நீண்ட மாதங்களுக்கு பிறகு மீண்டும் முகத்தை காட்டுகிறார் சுந்தர்சி. இயக்கமும் அவரே என்பதால், இப்பவே மகா ஜனங்கள் சிரிப்பதற்கு தயாராகிக் கொள்ளவும்.
‘காமெடி ப்ளஸ் த்ரில்லர் வகை படம்தான் இது. பொதுவாக பேய் படம், அல்லது பேய் பங்களாவை சுற்றி வரும் படம் என்றால், ஒரு குடும்பமோ, ஒரு காதல் ஜோடியோ அந்த பங்களாவுக்கு போகும். அங்கேயிருக்கிற எலிமென்ட் ஒண்ணு அவங்களை பாடாய் படுத்தும். அவங்க எப்படி தப்பிக்கிறாங்க என்பது கதையா இருக்கும். அரண்மனை அதிலேர்ந்து எப்படி வித்தியாசப்பட்டிருக்கு என்பதை ரிலீசுக்கு பிறகு நீங்களே சொல்லுங்க’ என்றார் சு.சி.
இந்த படத்திற்காக சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட பங்களாக்களை தேடிக் கொண்டிருந்தாராம். எப்படியோ ஐதராபாத்தில் நடிகர் மோகன்பாபு கட்டி வைத்த பங்களா ஒன்று ஆள் நடமாட்டமில்லாமல் கிடந்திருக்கிறது. அதில் வேறு சில டச்சப்புகள் செய்து அங்குதான் படமாக்கியிருக்கிறார்கள் அரண்மனையை. படத்தில் யார் பேயா நடிக்கிறாங்க என்பதையெல்லாம் அவர் மறைத்து வைத்தாலும், லட்சுமிராயின் ஓவர் மேக்கப், ஒருவேளை அவரா இருக்குமோ என்று கூட எண்ண வைத்தது.
ஒரு படத்தில் மூன்று ஹீரோயின்கள் இருந்தால், அங்கு என்ன நடக்கும்? இந்த படம் குறித்து எழுதுகிற மீடியாக்கள், இந்த மூவரின் சண்டை சச்சரவுகளையும் அவ்வப்போது அரசல் புரசலாக எடுத்துவிட, சொரேர் ஆனார் சுந்தர்சி. நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அதற்கான விளக்கத்தையும் கொடுத்தார். ஷுட்டிங் ஸ்பாட்ல ஈகோ இல்லாமல் நடந்துகிட்டாங்க. அது மட்டுமல்ல, மற்றவங்க சொல்ற மாதிரி என் போர்ஷனை குறைச்சிராதீங்க என்றெல்லாம் என்னை கேட்கவே இல்லை. நடிச்சதோட சரி. மற்றபடி என்கிட்ட அது சம்பந்தமா அவங்க பேசுனதேயில்ல என்றார் சத்தியம் பண்ணாத குறையாக.
நம்பிட்டோம்… !


