கலைஞரின் பேரனுக்கு கவுரவம் சேர்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்!
மௌனகுரு திரைப்படத்திற்கு வேறு எந்த திரைப்படத்திற்கும் இல்லாத ஒரு வெற்றி திமிர் உண்டு. ஏன்?
‘திமுக ஆட்சியில் கலைஞர் கருணாநிதியின் பேரன்கள் வைத்ததுதான் சட்டம். ஆட்சியில் இல்லையென்றால் அவர்கள் எல்லாரும் அம்போதான்’ என்று கூறப்பட்ட வதந்திகளுக்கு வைத்த ‘ஜெர்க்’தான் அந்த படம். கலைஞரின் மகன் மு.க.தமிழரசுவின் மகன் அருள்நிதி ஹீரோவாக நடித்த படம் அது. அதிக ஆர்ப்பாட்டத்தோடு ரிலீஸ் ஆகவில்லை என்றாலும் அடக்கமான வெற்றியை பெற்றது மௌனகுரு.
அந்த வெற்றிக்கு முழு காரணம், படத்தின் இயக்குனர் சாந்தகுமாரின் மிக நேர்த்தியான திரைக்கதையும் இயக்கமும்தான். அவரது இரண்டாவது படத்தை விநியோகஸ்தர்களும் ரசிகர்களும் ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்பது தனி. இப்போது சாந்தகுமாரின் கதை இந்திக்கு போகிறது. அதுவும் பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வழியாக என்பதுதான் சுவாரஸ்யம்.
தற்போது கத்தி படத்தின் முழு வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் முருகதாஸ் அடுத்து இயக்கவிருப்பது இந்தியில். சோனாக்ஷி சின்ஹாதான் ஹீரோயின். மௌனகுரு படத்தை முறைப்படி ரைட்ஸ் வாங்கி இந்தியில் எடுக்கப் போகிறாராம் முருகதாஸ். அதில் அருள்நிதி நடித்த கேரக்டரில்தான் சோனாக்ஷி நடிக்கவிருக்கிறார். மௌனகுருவில் செய்யப்பட்ட மாற்றமும் அதுதானாம். இங்கு ஒரு ஆண் நடித்த கேரக்டரை அப்படியே சோனாக்ஷி மீது பொருத்தியிருக்கிறாராம் முருகதாஸ்.
படம் அங்கும் ஹிட்டடிக்க வாழ்த்துவோம்.