அற்புதம்மாள் கதையை படமாக்குவேன்! ‘தங்க மீன்கள்’ ராம் அறிவிப்பு
‘லாபி’ பண்ணாமல் விருதுகள் வராது என்று தேசிய விருதுகள் பற்றிய பார்வை மீது ஒரு புட்டி மையை தொடர்ந்து வீசி வந்த பகடி பேச்சுகளுக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது தங்க மீன்கள். ‘பொதுவா ஒரு படத்திற்கு தேசிய விருது கிடைக்கப் போகிறது என்றால், அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே எப்படியோ நியூஸ் கசிந்துவிடும். பத்திரிகையாளர்களோ, அல்லது குழு சார்ந்த வேறு யாராவதோ போன் செய்து ‘உங்க படத்துக்கு விருது கிடைக்கும் போல. பேச்சு அடிபடுது’ என்பார்கள். ஆனால் இந்த முறை அப்படியல்ல. எங்க எல்லாருக்குமே துர்தர்ஷன் பார்த்துதான் விஷயமே தெரிஞ்சுது. இந்த படத்திற்கு ஏதாவது ஒரு விருது கிடைக்கும்னுதான் நாங்க நம்பிகிட்டு இருந்தோம். ஆனால் பாடலாசிரியர் நா.முத்துகுமாருக்கும், குழந்தை நட்சத்திரம் சாதனாவுக்கும் சேர்த்து இந்த விருது கிடைச்சது ரொம்ப பெருமையா இருக்கு‘ என்று பேச ஆரம்பித்தார் தங்க மீன்கள் இயக்குனர் ராம்.
தேசிய விருதுகள் குறித்த பேச்சு நீண்டு கொண்டே போனது. முடிவாக கைகுலுக்கிய போது அவர் சொன்ன விஷயம், மிக மிக முக்கியமான செய்தி. அப்பாவுக்கும் மகளுக்குமான உறவை சொல்ற படம்தான் தங்க மீன்கள். இந்த படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவு என்னை இன்னொரு முடிவெடுக்க வைத்திருக்கிறது. அதுதான் அம்மாவுக்கும் மகனுக்குமான பாசம்.
இப்படி சொல்லும்போதே சட்டுன்னு மனக் கண்ணில் வர்றவர் அற்புதம்மாள்தான். தன் மகன் பேரரறிவாளனை மீட்பதற்கு அவர் எடுத்து வரும் தொடர் போராட்டத்தையும் அந்த தாய்க்கும் மகனுக்குமான பாசத்தையும் ஒரு படத்துல சொல்லணும்னு தோணிச்சு. அதை ஒரு ஸ்கிரீன் ப்ளேவா உருவாக்கிகிட்டு இருக்கேன். தரமணி படத்தை முடிச்சுட்டு அடுத்ததா அதைதான் படமா பண்றதா இருக்கேன் என்றார்.
காங்கிரஸ் அரசோ, மோடி அரசோ, அல்லது மூன்றாவது அணியோ, எது வந்தாலும் அற்புதம்மாள் படத்திற்கு தேசிய விருதுகள் வரைக்கும் அனுமதிப்பார்கள் என்று தோன்றவில்லை. ஆனால் தமிழ்நாட்டு மக்கள் வெற்றி என்ற விருதை கொடுக்காமல் விடவே மாட்டார்கள். ஆரம்பிங்க ராம்…