ஆனை விலை, குதிரை விலை? 5 ந் தேதி வராதாம் எலி!
தன்னை வடிவேலு என்று நினைத்திருந்த வரைக்கும் அவர் ஒரு சூப்பர்ஹிட் காமெடியன். எப்போது தன்னை எம்ஜிஆர் என்று நினைக்க ஆரம்பித்தாரோ? அப்பவே ஆரம்பித்துவிட்டது சரிவு. இருந்தாலும் ‘நான் குதிரைடா… ’ என்கிற கோதாவுக்கு குறைச்சல் இல்லாமல் நடக்கிறார் வடிவேலு. இந்த முறையும் அப்படிதான்! படத்தின் ஹீரோதானே ஒழிய, எலியின் தயாரிப்பாளர் அவரல்ல. அதற்காக அவரை ஹீரோ என்கிற அந்தஸ்தில் மட்டுமா வைத்திருக்கிறது தயாரிப்பாளர் மனசு?
ஒவ்வொரு ஏரியா வியாபாரத்தையும் ஒப்பனாக விவாதிக்கிறார்களாம் வடிவேலுவிடம். ‘என்எஸ்சி எவ்ளோ கேட்கிறாய்ங்க? ஓ…. அவ்வளவா? முடியாதுன்னு சொல்லிடுங்க. இந்த ரேட் வந்தா மதுரை ராமநாதபுரம் ஏரியாவை தள்ளிவிட்ருங்க’ என்று எலியே களத்தில் இறங்கி வியாபார மூட்டையை நகர்த்த ஆரம்பித்திருப்பதால் கடும் காய்ச்சலில் இருக்கிறார்கள் விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களும்.
மொத்தத்தில் ஒன்பது கோடி கூட வியாபாரம் ஆகாத எலியை நாற்பது கோடி வரைக்கும் வியாபாரம் செய்துவிட வேண்டும் என்று எலி துடிப்பதால், ஆங்காங்கே தேக்கமாம். எப்படியோ பணம் போட்ட தயாரிப்பாளர் கடைசி நேரத்தில் ஒரிஜனல் நிலைமையை உணர்ந்து சாதுர்யமாக காய் நகர்த்துவதால், 5 ந் தேதி திரைக்கு வர வேண்டிய எலி, இம்மாதம் 19 ந் தேதி திரைக்கு வரும் போல தெரிகிறது.
வடிவேலுவை போல ஒரு திறமையான காமெடியனுக்காக ஏங்குது தமிழ்நாடு. அதை அவரே மனசார புரிந்து கொண்டால் போதும். எல்லாமே சுபம்!