கிண்டியது உப்புமா? இனிமேலாவது தப்புமா?
கொழுத்த துட்டு இருக்கிற தயாரிப்பாளர்கள் கூட, கொழுத்த ஹிட்டு கொடுத்த இயக்குனர்களுடன் சேர்வதைதான் விரும்புகிறார்கள். ஆனால் ஜெயம் ரவியை வைத்து ‘மிருதன்’ என்ற மகா மகா பிளேடு படத்தை எடுத்த சக்தி சவுந்தர்ராஜனுடன் மீண்டும் இணைந்திருக்கிறார் அதே ஜெயம் ரவி. திரைக்கதையில் வித்தையில்லை. திடுக்கிடும் திருப்பங்கள் இல்லை. ஒரே மாதிரி ‘ராவான’ ரவாவை மிருதன் படத்தில் கிண்டிய இவருக்கும் ஜெயம் ரவிக்கும் அப்படியென்ன அண்டர்ஸ்டாண்டிங் என்றெல்லாம் திக்கித்து விக்கித்துப் போயிருக்கிறது இன்டஸ்ட்ரி.
“ஏங்க மறுபடியும் ஒரு தோல்விப்பட இயக்குனரோடு சேர்ந்து படம் பண்ணணுமா?” என்று கேள்வி கேட்கும் மீடியா தோழர்களுக்கு ஜெயம் ரவி சொல்லும் பதில், ப்ளீச்சிங் பவுடரை போட்டு பல் விளக்கிய எபெக்டை வரவழைத்திருக்கிறது. அவ்வளவு எரிச்சலா? இல்லையில்ல…அவ்வளவு பளிச்!
“ஒருவர் தோற்றுவிட்டால், அதற்கப்புறம் ஜெயிக்கவே கூடாதா? வாய்ப்பு கொடுத்தால்தானே அவரால் இன்னொரு முயற்சியில் ஈடுபட முடியும்? அதனால் நான் மீண்டும் வாய்ப்பு கொடுத்திருக்கேன். எனிவே… நாங்க இனிமே எடுக்கப்போற அந்த புதுப்படத்தின் கதை அவ்வளவு நல்லாயிருக்கு” என்கிறாராம்.
திருடன் போலீஸ், ஒருநாள் கூத்து படங்களை தயாரித்த கெனன்யா பிலிம்ஸ் இப்படத்தை தயாரிப்பதாக இருந்ததாம். சக்தி சவுந்தர்ராஜன் கொடுத்த பட்ஜெட் பகீர் திகீர் என்ற நிலைமைக்கு ஆளாக்கியதால் கெனன்யா கழன்று கொள்ள, உள்ளே வந்திருக்கிறார் நேமிசந்த் ஜபக்!
கடைசியா ஆர்யாவை வச்சு ‘மீகாமன்’னு ஒரு படத்தை தயாரித்தாரல்லவா? அவரேதான் இவர்!