ஏடுகொண்டலவாடா வெங்கட்ரமணா கோவிந்தா கோவிந்தா…!
“வேட்டிய கிழிச்சா துண்டு. அந்த துண்டையே ரெண்டா கிழிச்சு தலையில கட்டிகிட்டா பரிவட்டம். ஏண்டா அதுக்கு நாயா பேயா அடிச்சுகிறீங்க…? இந்தா…. ஆளுக்கொரு பரிவட்டத்தை கட்டிகிட்டு கிளம்புங்கடா…!” -ஊருக்கு ஊர் நடக்கும் கோவில் முதல் மரியாதை சண்டைகளை இதைவிட நேரடியாக கிழித்து தொங்க விடுகிற துணிச்சல் கவுண்டமணியை விட வேறு எவருக்கும் வந்ததில்லை. வரப்போவது இல்லை.
சினிமாவில் பகுத்தறிவு சிந்தனைகளை போகிற போக்கில் போட்டுத் தாக்கிவிட்டு போன அந்த புண்ணியவானுக்கு அளவுக்கு அதிகமான கடவுள் நம்பிக்கை உண்டு என்றால் உங்களால் நம்ப முடியுமா? அப்படி நம்ப முடியாதவர்கள் வெங்கட்நாராயணா சாலையில் அமைந்திருக்கும் பெருமாள் சன்னதிக்கு மதியம் ஒன்றரை மணி சுமாருக்கு போனால் அண்ணன் கவுண்டமணியை காணலாம்.
பயபக்தியோடு ஆலயத்தை சுற்றி வருகிறார் அவர். கடந்த பல வருஷங்களாகவே இந்த பக்தி பிரார்த்தனையை கடைபிடித்து வருகிறாராம் கவுண்டர். பகுத்தறிவு வேறு. மூட நம்பிக்கை வேறு. இறை பக்தி வேறு என்று புரிந்து கொள்கிறவர்களுக்கு மட்டும், கவுண்டரின் இந்த செயல் எவ்வித முணுமுணுப்பையும் ஏற்படுத்தாது.