தேன்மிட்டாய் சுமந்த அரிசி மூட்டை! போக்கிரி ராஜா படப்பிடிப்பில் ஹன்சிகா நெகிழ்ச்சி
பிளைட்டை பிடிக்கிற அவசரத்திலிருந்தார் ஹன்சிகா மோத்வானி. அவரிடம், “இந்த ஏழைங்களுக்கு கொஞ்சம் உதவி செஞ்சுட்டு போங்களேன்” என்று தயாரிப்பாளர் பி.டிசெல்வகுமார் அழைக்க, கொடி தலையில் கோணிமூட்டையை ஏற்றினார்கள். நம்புங்கய்யா நம்புங்க. அந்த ஐந்து கிலோ அரிசி மூட்டையை தூக்க முடியாமல் தூக்கி ஒவ்வொருவருக்கும் ஹன்சிகா வழங்க, வாங்கியவர்கள் முகத்தில் வடிந்ததெல்லாம் தேன்!
சற்று விரிவாக பார்ப்போமா? ‘போக்கிரி ராஜா’ படப்பிடிப்பு ஏ.ஆர்.எஸ் கார்டனில் நடந்தது. படத்தின் ஹீரோ ஜீவாவும், தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமாரும் கடைசி நாள் படப்பிடிப்பான இன்றைய தினத்தில் மனதை விட்டு அகலாத சம்பவத்தோடு படப்பிடிப்பை நிறைவு செய்யலாமே என்று நினைக்க, உடனடி ஆக்ஷன் ஆரம்பம். இந்த வெள்ள சேதத்தின் போது மக்களுக்கு விழுந்து விழுந்து இன்னமும் பணியாற்றிக் கொண்டிருக்கும் துப்புரவுத் தொழிலாளிகளை அழைத்து அவர்களுக்கு அரிசி, புடவை, வேஷ்டி, மளிகை பொருட்களை உதவியாக வழங்கினால் எப்படியிருக்கும் என்று முடிவெடுத்தார்கள். அதை ஹன்சிகா கையாலும் ஜீவா கையாலும் செய்ய, வாங்கியவர்கள் முகத்தில்தான் எத்தனை சந்தோஷம்?
ஹன்சிகாவின் மெல்லிய தேகத்தின் முன் அந்த ஐந்து கிலோ அரிசி மூட்டை சற்று கடினமானதுதான். இருந்தாலும் பல்லை கடித்துக் கொண்டு அதை சுமந்து சுமந்து விநியோகித்துக் கொண்டிருந்தார் அவர். பேசிக்கலாகவே அவங்க இரக்க குணம் உள்ளவங்க. நிறைய அநாதை குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வர்றாங்க. இப்படியொரு விஷயத்தை செய்யணும்னு நினைத்தவுடன், ஹன்சிகாவைவிட பொறுத்தமானவர் வேறு யார் இருக்க முடியும்னு தோணுச்சி என்கிறார் படத்தின் இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பன்.
அதிருக்கட்டும்… படம் எப்படிப்பட்ட படம்? முழுக்க முழுக்க காமெடி படம்தான். அதுவும் ஜீவா சார் காமெடி சப்ஜெக்ட் பண்ணி ரொம்ப நாளாச்சு. அவர்ட்ட இந்த கதையை சொன்னதும், அவரும் ஜாலியா ஒரு படம் பண்ணி ரொம்ப நாளாச்சு என்று ஒப்புக் கொண்டார். சிபிராஜ் ஒரு முக்கியமான ரோல் பண்ணியிருக்கார். ரெண்டு பேரும் சினிமாவை தாண்டி, வாடா போடா பிரண்ட்ஸ். ஷுட்டிங் ஸ்பாட்ல அவ்வளவு ஜாலியா இந்த படத்தில் நடிச்சுக் கொடுத்தாங்க என்றார்.
இன்றைய தினம் ஹன்சிகாவுடன் சிபிராஜுக்கு காம்பினேஷன் ஷாட்டாம். மனுஷன் சென்ட் அடித்துவிட்டு வந்ததாக குறைபட்டுக் கொண்டார் ஜீவா. ஆமா… இல்லேன்னா சிபிராஜுக்கு ஹன்சிகா ஜோடியா நடிக்கப் போறாரா என்ன? அனுபவிக்கட்டும்… அனுபவிக்கட்டும்…