வாத்தியாரு சொன்னா கேளுங்கப்பா… விரக்தியில் டைரக்டர் ஹரி?
மொட்ட பன மரத்துல பட்டம் கட்டுன திமிரோடுதான் நடந்து கொள்வார்கள் பல ஹீரோக்கள். இது கோடம்பாக்கத்தின் சாபக்கேடு. நள்ளிரவில் திடீர் கொம்பு முளைத்ததை போல அவ்வப்போது திகில் காட்டுவார்கள். தன்னை வைத்து படம் இயக்கும் இயக்குனர்களின் மனசை ரணப்படுத்துகிற இந்த ஹீரோக்கள், ஹரி படம் என்றால் மட்டும் நடு முதுகில் சுளுக்கிக் கொண்ட நல்ல பாம்பு போல ஜர்க் அடிப்பார்கள். ஏனென்றால் படத்தில் வரும் ஹீரோ, வில்லன், இரண்டு பேரையும் மிக்ஸ் பண்ணிய கேரக்டர்தான் நிஜமான ஹரி. தன் படத்தின் ஹீரோ என்றும் பார்க்க மாட்டார். நட்ட நடு ஷுட்டிங்கில் வைத்து மானத்தை வாங்கிவிடுவார். எல்லாரையும் நடுநடுங்க வைக்கும் சிம்புவே கூட, ஹரி படத்தில் நடிக்கும் சர்வ அடக்கத்தோடு வந்து போனதை இன்டஸ்ட்ரி அறியும்.
அப்படிப்பட்ட ஹரியே இப்போதெல்லாம் நொந்தாயணம் படிக்கிறாராம். எல்லாம் விஷாலின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல்தான்! ஏற்கனவே தாமிரபரணி படத்தில் ஹரியும் விஷாலும் இணைந்து பணியாற்றினாலும், அந்த படத்தில் ஹரி தனக்கு கொடுத்த டார்ச்சரையெல்லாம் அவ்வப்போது நினைத்து பார்த்து பெருமூச்சு விடுவாராம் விஷால். இப்போது இருப்பது பழைய விஷால் அல்ல. முற்றிலும் வீரத்தில் தோய்த்தெடுக்கப்பட்ட கத்தியாகிக் கிடக்கிறார் மனுஷன். ‘கையில பணம் இல்லாதப்பவே துள்ளுவேன். இப்ப கையில வேற காசு புரளுதா? வெளையாண்டுற வேண்டியதுதான்’ என்று அவரே பல இடங்களில் சொல்கிற அளவுக்கு சுக்கிரன் உச்சத்திலிருக்கிறான் விஷாலுக்கு.
இந்த நேரத்தில் ‘பூஜை’ என்ற படத்தை விஷாலே தயாரிக்கிறார். அதன் இயக்குனர் ஹரி. படப்பிடிப்பில் ஷாட் வைப்பதிலிருந்து ஷாட் ஓ.கே சொல்வது கூட விஷால்தானாம். இந்த தகவல் கேட்பதற்கு அதிர்ச்சியாக இருந்தாலும், நிஜம் அதுதான் என்கிறது ஊர் உலகம். படத்தின் ஒளிப்பதிவாளரான ப்ரியன், விஷாலின் முடிவுகளை கண்டு சில நேரம் அதிர்ச்சியாகி, ஹரி சார். இந்த ஷாட் ஓ.கே இல்ல. ஆனால் விஷால் ஓ.கேங்கிறாரு. என்ன செய்ய? என்று ஹரியிடம் கேட்டால், வாத்தியாரு சொல்லிட்டாருல்ல? விட்ருங்க என்கிறாராம் ஹரி. அதுவும் ஓப்பன் மைக்கில்.
அங்க என்னதாங்க நடக்குது?