விஜய் ஆன்ட்டனிக்கு ஜிங்ஜக்… நாயகியின் ரூட் ஏன் எதற்கு?
கொரானோவுக்கு தடுப்பூசி வந்தாச்சு. ஆனால், பேரன்பு கொண்ட ரசிகர்களே… நீங்கதான் இந்த சினிமாவுலகத்து சிக்கலுக்கும் ஒரு தடுப்பூசி போட்டு உதவணும் என்று கதறாத குறையாக கண்ணீர் வடிக்கிறது ஆல் ஏரியா சினிமா கொட்டாய்ஸ்.
மல்டிபிளக்ஸ்களின் மவுத்துக்கு ஒரு செல்ல உம்மா கொடுத்து சென்ற மாஸ்டர், பெருமளவு நம்பிக்கை தந்தாலும் பிற்பாடு வந்த படங்களெல்லாம் மீண்டும் மீண்டும் தியேட்டர் வட்டாரத்தை கதற விட்டு வருவது தனிக்கதை. (மாஸ்டர் ஓடியதற்கு காரணமே எடப்பாடி பழனிச்சாமிதான். அந்த நேரத்தில் அவர் அறிவித்த 2500 ரூபாய் இலவசம், தியேட்டருக்கும் மாஸ்டருக்கும் வெள்ளமாக பாய்ந்தது என்கிறார்கள் அதிமுக வின் அன்பு ரத்தங்கள்)
இப்படிப்பட்ட கொரானோ காலத்தில் தானே முன் வந்து தன் சம்பளத்தை குறைத்த விஜய் ஆன்ட்டனி, இந்நேரம் கோடம்பாக்கத்தில் தனக்கு ஒரு சிலை வைப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்தாலும் தப்பில்லை. போகட்டும்… நல்ல மனசு வி ஆ வுக்கு மீண்டும் ஒரு நல்ல நேரம் வாய்க்கவிருக்கிறது. அதுதான் கோடியில் ஒருவன். ஆனந்த கிருஷ்ணன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஒரு முறை சேர்ந்து பயணித்த இயக்குனருடன் மீண்டும் சேர்வதாக ஒரு ஹீரோ முடிவெடுக்கிறார் என்றால், ஒன்று படம் நன்றாக வந்திருக்க வேண்டும். இல்லையென்றால் அந்த இயக்குனர் நன்றாக ஹீரோவை ‘கவனித்திருக்க‘ வேண்டும். எது எப்படியோ, விஜய் ஆன்ட்டனி வாயிலிருந்தே “நான் இந்த இயக்குனருடன் ரிப்பீட் அடிப்பேன்“ என்ற வார்த்தை வந்துவிட்டது.
படத்தின் ஹீரோயின் ஆத்மிகாவை கேட்டால், விஜய் ஆன்ட்டனி புகழை இருபது பக்கத்திற்கு மிகாமல் எழுதிக் கொடுப்பார் போலிருக்கிறது. “அவர் ஒரு ரியல் லைப் ஹீரோ. கொரானோ பாதிப்பு குறைய ஆரம்பித்த பிறகும் பல ஹீரோக்கள் ஷுட்டிங் வர யோசனை செய்த போது, தொழிலாளர்களின் நலனுக்காக முதலில் ஷுட்டிங்குக்கு வந்தவர் விஜய் ஆன்ட்டனிதான்“ என்றெல்லாம் பாராட்டியிருக்கிறார். இவ்வளவு பாராட்டுக்கு பின்னாலும் ஒரு சுயநலம் எட்டிப்பார்ப்பதுதான் ஐயகோ.
யெஸ்… போஸ்டர்களில் ஹீரோவுக்கு இணையாக ஹீரோயின் பெயரும் இருக்க வேண்டும் என்று கூறியிருந்தாராம் விஜய் ஆன்ட்டனி. அதற்காகவும் சேர்த்துதான் இத்தனை பாராட்டு.
ஆத்மிகா கூந்தல்ல அல்லிப்பூ மலருதுன்னா, அதுக்கும் ஒரு காரணம் இருக்கும்ல? இன்னும் எத்தனை படத்துக்கும்மா விஜய் ஆன்ட்டனியோட சேர்ந்து நடிக்க பிளான் போட்ருக்கீங்க?