சிம்புவால் அவதி? பஞ்சாயத்துக்கு வந்த பாண்டிராஜ்- டிஆர்
நேற்று விசேஷமான நாள்! யாருக்கு என்றால் மட்டும் பதில் சொல்வது கஷ்டம். ஏன்? பிரச்சனை அப்படி சாமீய்….
‘சிம்புவுடன் மீண்டும் சேர்ந்து நடிக்கிறீங்களா?’ என்று நயன்தாராகிட்டயே கேட்போம் என்கிற அளவுக்கு தன்னம்பிக்கை திலகம் பசங்க பாண்டிராஜ். அதே நம்பிக்கையோடு அவர் நயன்தாராவுக்கு போன் போட, எல்லாம் சுபம். ‘அதுக்கென்ன… நடிச்சா போச்சு’ என்றார் அவரும். இந்த பதிலாலும், பிரிந்த ஜோடி சேர்ந்ததாலும் ஊர் உலகமே வியப்பில் ஆழ்ந்துவிட, ‘இது நம்ம ஆளு’ படத்தை துவங்கினார் பாண்டிராஜ். ஆனால் இன்பாக்ஸ்சில் வந்து எச்சரித்தார்கள் அவரது நலன் விரும்பிகள். ‘இது சரிப்படாது. பார்த்துக்கோ. இப்பவே எஸ்கேப் ஆகிட்டா, பி.பி. மாத்திரை செலவெல்லாம் மிச்சம்’ என்று அவர்கள் எச்சரிக்க, அட கிராதகர்களே… என்பது போலவே அவர்களை டீல் பண்ணினார் பாண்டிராஜ். எல்லாம் சில காலம்தான்.
நலன் விரும்பிகளின் எச்சரிக்கையே நாளும் பொழுதுமானது பாண்டிராஜுக்கு. பல மாதங்களாக இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது படம். பொதுவாக தான் ஆரம்பிக்கும் படத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்துவிடும் பாண்டி, இந்த முறை சிம்புவின் அணுகுமுறையால் சீற்றம் வந்த சிங்கம் ஆகியிருந்தார். அதற்காக என்ன செய்வது? பாத்ரூம் கதவை சாத்திக் கொண்டு உறுமுவதும், கதவை திறந்து சிரிப்பதுமாக போனது லைஃப். எதுவும் நடக்கவில்லை. பொறுத்து பொறுத்து பார்த்தவர், அப்படியே இந்த படத்தை கிடப்பில் போட்டுவிட்டு சூர்யா நடிக்கும் ஹைக்கூ என்ற படத்தை இயக்க போய்விட்டார். இது முழுக்க முழுக்க குழந்தைகள் படம்.
சும்மா கிடந்தாலும் கிடக்கணும். வேறு வேலை பார்க்க போனால் சிலருக்கு பிடிக்காதல்லவா? இப்போது இது நம்ம ஆளு படத்தை முடிச்சு கொடுக்காமல் பாண்டிராஜ் இழுத்தடிக்கிறார் என்று இடி இடிக்கிறதாம் சிம்பு தரப்பில். நான் ரெடி… வாங்க, முடிக்க வேண்டிய வேலையை பார்க்கலாம் என்று அழைக்கிறார்களாம். ஹைக்கூவை முடிக்காமல் எப்படி போவது? இவர்களின் புலம்பலை கண்டு கொள்ளவேயில்லை பாண்டிராஜ்.
இந்த நிலைமையில்தான் தயாரிப்பாளர் சங்கத்தின் உதவியை நாடினாராம் டி.ராஜேந்தர். பாண்டிராஜை வந்து படம் பண்ண சொல்லுங்க என்று அவர் கேட்டுக் கொள்ள, டிஆருக்காக பேச்சு வார்த்தையில் இறங்கினார் தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு. இருவரையும் வரவழைத்து பேசியிருக்கிறார்களாம். என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பது இன்னும் யாருக்கும் தெரியவில்லை. ஒருவேளை முடிவுக்கு வராமலே முடிந்துவிட்டதா மீட்டிங் என்றும் புரியவில்லை.