பிரபல பைனான்சியர் அய்யப்பன் மரணம்
திரையுலகத்தை சேர்ந்த யாரும் அய்யப்பனை மறந்திருக்க முடியாது. சன் டி.வி யின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சக்சேனாவுடன் இவரும் சேர்த்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதும், சிறையில் போலீசாரால் தாக்கப்படுவதாக பிரஸ் முன் கண்ணீர் மல்க கதறியதையும் கூட மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள். திமுக ஆட்சி காலத்தில் செல்வாக்காக இருந்த இருவரும், ஆட்சி மாறியதும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார்கள்.
சன் தொலைக்காட்சியில் இவர்கள் இருவருக்கும் இருந்த செல்வாக்கும் பறிபோனது. இருந்தாலும் சட்ட ரீதியாக போராடி வந்தார்கள்.
பல்வேறு படங்களை விநியோகம் செய்தவர், சின்னப்படங்களை தயாரித்தவர், அத்துடன் பைனான்சியர் என்ற வகையில் அய்யப்பனுக்கும் திரையுலகத்திற்குமான தொடர்பு மிக முக்கியமானது. கடந்த பல மாதங்களாக நோய் வாய் பட்டிருந்த அவர், சில தினங்களுக்கு முன் சென்னையில் காலமானார். சிறுநீரக கோளாறால் அவர் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது.
அய்யப்பனின் உடல் அவரது சொந்த ஊரான மதுரைக்கு எடுத்துச் செல்லப்பட்டு எரியூட்டப்பட்டது.