திரவத்தை நாய் நக்குது… அந்த நாய் கடிச்ச வாட்ச்மேனும் நாயாகிடுறான்… இதுக்கு ஜெயம் ரவி என்ன பண்ணுவாரு?
“சமுதாயத்துல நடக்குற கொடுமைகளையெல்லாம் தோள் பட்டையில ஏத்திக்காமல் விட மாட்டேன்” என்று தடந்தோள் உயர்த்தி கிளம்பி வருகிற ஹீரோக்கள் வரிசையில் தெரிந்தோ தெரியாமலோ ஜெயம் ரவியும் சேர்ந்துவிட்டார். தனி ஒருவன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே, “இனி வரும் படங்களில் வெறும் காதலுக்கும் ஆக்ஷனுக்கும் மட்டும் முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது. அப்படியே சொசைட்டி பிரச்சனை பற்றியும் பேசணும். பொங்கணும். வெட்டணும்… குத்தணும்” என்கிற ஆசையெல்லாம் வந்துவிட்டதாம் அவருக்கு. இதையடுத்து அவர் கதை கேட்க உட்காரும் முன்பே, “சார்… என்னைய முன்ன மாதிரி நினைச்சுகிட்டு கதை சொல்லாதீங்க. என்னால இந்த சமுதாயத்துக்கு ஒரு பயன் இருக்கணும். அதுமாதிரி சொல்லுங்க” என்று கூறிவிட்டுதான் அமர்வாராம்.
அதன் விளைவுதான் இந்த நாய் வாட்ச்மேன் கதை.
தேமுதிகவின் அதிருப்தி எம்.எல்.ஏவும் பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்கப் போகிறார் ஜெயம் ரவி. அந்த கதை அப்படியே சொசைட்டியை கழுவி குளிப்பாட்டி பவுடர் போட்டு பொட்டு வைக்கிற கதைதானாம். ஊட்டியில் ஒரு தொழிற்சாலை. ஒருமுறை அந்த தொழிற்சாலையின் வெளியே கசிந்திருக்கும் திரவம் ஒன்றை நாய் நக்கிவிடுகிறது. மறுநாளே அதற்கு வெறி பிடித்துவிடுகிறது. சும்மாயில்லாமல் அங்கிருக்கும் வாட்ச்மேனை அந்த நாய் கடித்து வைக்க, என்னென்னவோ முதலுதவிகள் செய்தும், ஹையோ பாவம். அவனும் நாயாகிவிடுகிறான்.
இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருக்கும் அந்த ஊர் டிராபிக் கான்ஸ்டபிள் ஜெயம் ரவி, அந்த தொழிற்சாலையில் நடக்கும் அத்துமீறல்களை கண்டுபிடித்து தொழிற்சாலையை மூட வைத்து மக்களை காப்பதுதான் கதையாம்.
ஒரு வெண்ணை டப்பாவை இப்படி வெடிமருந்து குடோன் ஆக்கிட்டீங்களே டைரக்டர்ஸ்?