செக்கை திருப்பி அனுப்பிய ஜெயம் ரவி! டைரக்டர் அப்செட்?
இடம் பார்த்து கால் வைக்கவில்லையென்றால், ‘முன் நகம் பெயருதோ, முட்டிக்கால் உடையுதோ?’ என்றாக்கிவிடுகிறது சினிமா. சிவகார்த்திகேயனுக்கு ஒரு ரஜினி முருகன். பாண்டிராஜுக்கு ஒரு இது நம்ம ஆளு. விஷாலுக்கு ஒரு மதகஜராஜா என்று தண்ணி காட்டி வருகிறது தப்பான அப்ரோச். இப்படி இடம் தெரியாமல் கால் வைத்தவர்களுக்கு இன்டஸ்ட்ரி கொடுக்கிற தண்டனை, பின்னால் வரும் ஹீரோக்களுக்கும் இயக்குனர்களுக்கும் புத்தி சொல்லாமல் போவதில்லை.
இன்று ஜெயம் ரவிக்கு ஏறுமுகமல்லவா? தனி ஒருவன் வெற்றி எல்லா இயக்குனர்களையும் அவர் வீட்டுக்கதவையும் ஆவலோடு தட்ட வைக்கிறது. இங்குதான் அந்த பிரச்சனை? சில வாரங்களுக்கு முன் ஜெயம் ரவியை சந்தித்தார் அந்த இயக்குனர். ஸ்டைலிஷாக இங்கிலீஸ் பேசி, என்கவுன்ட்டர் கதைகளாக ச்சூஸ் பண்ணி அடிப்பார் ஹீரோக்களை. இப்படி ஹீரோக்களை வேட்டையாடுவதும், விளையாடுவதும் அவருக்கு சர்வசாதாரணமான விஷயம்தான். ஆனால் அவர் வெறும் இயக்குனராக இருக்கிற வரைக்கும்தான் “காம்பினேஷன்னா அவரோட இருக்கணும்” என்று ஆசைப்பட்டார்கள் சினிமாக்காரர்கள். அதற்கப்புறம் அவரே சொந்தப்படம் என்று இறங்கினாரல்லவா? பலருக்கும் சம்பளத்தில் பட்டை நாமம் போட ஆரம்பித்தார். முதலாளியான பின் இவர் படங்களும் இழுத்துக்கோ, பறிச்சிக்கோ என்றுதான் ஓடுகிறது.
இவர்தான் வந்து கதை சொன்னார் ஜெயம் ரவிக்கு. இரு தரப்புக்கும் திருப்தி…. அதற்கப்புறம் ஒரு செக்கை கிழித்து அதில் ஐம்பது லட்சத்தை பூர்த்தி செய்தவர் அதை ஜெயம் ரவி கையில் கொடுத்துவிட்டு “நம்ம பேனர்ல இந்த படத்தை பண்றோம்” என்று கூறிவிட்டு கிளம்பினாராம். அவர் போன பிறகுதான் அங்கு வந்து சேர்ந்தார்களாம் ரவியின் நண்பர்கள் சிலர். “எப்படியும் இந்த செக்கை பேங்கில் போட்டால் ரிட்டர்ன்தான் ஆகப்போவுது. உனக்கு பணமும் வரப்போறதில்ல. ஆனால் செக் பவுன்ஸ் ஆனாலும் அவருக்கு லாபம்”.
“என்னிடம் கதை கேட்டார். பண்றேன்னு ஒத்துக்கிட்டார். அதுக்காக அட்வான்ஸ் கூட வாங்கினார் என்று அந்த ரிட்டர்ன் ஆன செக்கையே எவிடென்ஸ் ஆக வைத்துக் கொண்டு உன் கால்ஷீட்டை அதிகாரமாக கேட்பார். அப்ப என்ன பண்ணுவே? ஆரம்பத்திலேயே இந்த பிராஜக்ட்லேர்ந்து அவுட்டாகிரு” என்றார்களாம். குழம்பிய ரவி, செக்கை அவர் ஆபிசுக்கே திருப்பி அனுப்பி வைத்தாராம்.
ஒரு கலக்கல் காம்பினேஷன், காலாவதியானது ஒரே நாளில்! இதுதாண்டா சினிமா…