நானும் கமலும் மனநலம் குன்றிய அந்த இளைஞனை பார்த்து சிரிச்சுட்டோம்! ஒய்.ஜி.மகேந்திரன் கவலை
சொப்பன வாழ்வில்… என்று தொடங்கும் எம்.கே.தியாகராஜ பாகவதரின் குரலை கேட்ட அந்த கால பெரிசுகள் யாரேனும் இப்போது இருந்தால், இரண்டு நாளைக்கு முன்பே ஒய்.ஜி.மகேந்திரன் நாடகம் நடத்தும் சபா முன் சப்பணக்கால் போட்டு இடம் பிடித்திருப்பார். ஏனென்றால், ஒரு கனமான கருத்தோடு நகைச்சுவை வெடியையும் கொளுத்திப் போடும் நோக்கத்தில் அவர் நடத்தவிருக்கும் நாடகத்தின் பெயர் சொப்பன வாழ்வில். அது மட்டுமல்ல, எம்.கே.டி யின் அந்த பாடலையே இந்த நாடகத்தின் தீம் சாங் ஆகவும் வடித்தெடுத்துவிட்டார். இசை- ரமேஷ் வினாயகம்.
இந்த உலகத்துல யாரும் சாதாரணமானவங்க இல்ல. சற்றே குள்ளமானவர்களாக இருந்தால்… அல்லது சற்று தோற்றத்தில் வித்தியாசமானவராக இருந்தால்… அவர்களை சற்று இளக்காரமாகதான் பார்க்கிறோம். நானே சமயங்களில் அந்த தவறை செய்திருக்கிறேன். ஒரு பிரபல திரைக்கலைஞர் ஒருவரிடம் சற்றே மனநலம் குன்றிய வாலிபன் ஒருவன் வேலை பார்த்து வந்தான். ஒரு நாள் அவன் என்னையும் கமல்ஹாசனையும் பார்த்து, சார்… எனக்கு கல்யாணம்னு சொன்னான். உடனே நாங்க ரெண்டு பேரும் சிரிச்சுட்டோம். இப்பதான் நான் அதை நினைச்சுப் பார்க்கிறேன். ஏன்… அவன் கல்யாணம் பண்ணிக்கக்கூடாதா? இப்படிதான் நம்மை விட தாழ்ந்தவர்களை நாம் எளக்காரமாக பார்க்கிறோம். அந்த எண்ணம் வேண்டாம் என்பதை சொல்ல வரும் நாடகம்தான் இது என்றார் ஒய்.ஜி.மகேந்திரன்.
நாடகம் அழிந்து வருகிறது என்கிற கூற்றை பொய்யாக்கிவிடுவார் போலிருக்கிறது ஒய்ஜி.எம். இன்னும் வாரத்திற்கு இரண்டு நாடகங்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன அவரது முயற்சியில். இதுபோன்ற நல்ல கருத்துக்களோடு அவர் வரும் பட்சத்தில் நாடகமும் வளரும். அந்த மன நலம் குன்றிய இளைஞன் போன்ற எளியவர்களுக்கும் மரியாதை கிடைக்கும். தொடருங்கள் ஒய்.ஜி.எம்.