100 போலீஸ்… நடுவில் ரஜினி கன்னடர் கலவரம் மாண்டியா நிலவரம்
தனக்கு இப்படியொரு எதிர்ப்பு வரும் என்று ரஜினியே நினைத்திருக்கப் போவதில்லை. கர்நாடகாவை சேர்ந்த சில அரசியல் அமைப்புகள் ரஜினி படமான ‘லிங்கா’ படப்பிடிப்பை தங்கள் மாநிலத்தில் எங்கும் நடத்தக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். (அதற்குள் இதை ‘ரஜினியின் ஸ்டன்ட்’ என்று ஒரு சில கற்பனாவாதிகள் புழுதி கிளப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். நெகட்டிவ் பப்ளிசிடி செய்துதான் ரஜினி தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்கிற அவசியம் அவருக்கு ஒரு போதும் ஏற்பட்டதில்லை என்பதை காலம் எவ்வளவு அழுத்தமாக கூறினாலும், சிலரின் கற்பனைக்கு எல்லை ஏது? அதனால் லீவ் இட்)
காவிரி விவகாரத்தில் ஆறு கோடி கன்னடர்களையும் ரஜினி அவமதித்துவிட்டார். தமிழகத்திற்கு தண்ணீர் தராத அவர்களை உதைக்க வேண்டாம்? என்று அவர் அப்போது பேசியதை இப்போது கையில் எடுத்துக் கொண்ட இந்த அமைப்பினர் தொடர்ந்து மூன்றாவது நாளாக படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் பிரச்சனை செய்து வருகிறார்கள். 100 க்கும் மேற்பட்ட போலீஸ் இந்த படப்பிடிப்புக்கு காவல் அரணாக நிற்க, நடுவில் டென்ஷனோடுதான் நடித்து வருகிறாராம் ரஜினி.
இதற்கிடையில் படத்தின் தயாரிப்பாளரான ராக்லைன் வெங்கடேஷ், இது குறித்து கூறியிருப்பதாவது-
“இதெல்லாம் விளம்பரத்திற்காகவும் வேறு சில விஷயங்களுக்காகவும் செய்கிறார்கள். உண்மையிலே ரஜினி எந்த அளவுக்கு கர்நாடகாவை நேசிக்கிறார் என்பது கன்னட மக்களுக்கு தெரியும். அதேபோல கன்னட மக்களும் ரஜினியை அளவு கடந்து நேசிக்கிறார்கள்.எக்காரணம் கொண்டும் ‘லிங்கா’பட ஷூட்டிங்கை கர்நாடகாவில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற மாட்டோம். மேலும் கர்நாடகா முழுவதும் ரஜினியின் நெருங்கிய நண்பர்களும் கர்நாடக வீட்டுவசதித் துறை அமைச்சருமான அம்பரீஷ் போன்ற நிறைய அரசியல்வாதிகளும் அவருடைய நலம் விரும்பிகளாக இருக்கிறார்கள். எதனைப் பற்றியும் நாங்கள் கவலைப்படவில்லை”
என்று கூறியிருக்கிறார்.
இந்த பரபரப்புக்கு நடுவில் ரஜினியின் ‘கோச்சடையான்’ படம் மே 9 ந் தேதி கர்நாடகத்திலும் வெளியாகிறது. இந்த கன்னட கலவர அமைப்பினர் தியேட்டர்களில் கூச்சலிட்டு குழப்பம் விளைவிப்பார்களோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.