ஆனந்திய பத்திரமா அனுப்பி வச்சுருங்க!
‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’ ஹிட்டானாலும் ஆனது. எனக்கு ராசியான ஜோடி ஆனந்திதான் என்ற திட்டவட்ட முடிவுக்கு வந்துவிட்டார் ஜி.வி.பிரகாஷ். அதற்கப்புறம் அவர் நடிக்கும் இரண்டு படங்களுக்கு இவரையே சிபாரிசு செய்ததெல்லாம் வீட்டுக்குள் பிரளயம் ஏற்படுத்தாத சின்ன சின்ன சங்கடங்கள்தான். இந்த ஒப்பற்ற ஜோடி ஒரு படத்திலும் பிரிவதில்லை என்று நினைத்து வந்த நேரத்தில்தான், ‘யாரை நம்பியும் யாரும் இருக்கக் கூடாது’ என்ற முடிவுக்கு வந்தாராம் ஆனந்தி.
அப்புறம்? விமலுடன் ஒரு படத்தில் ஜோடி போட கிளம்பிவிட்டார். இந்த படத்தை பிரபல நகைச்சுவை அரசர் பூபதிபாண்டியன் இயக்கவிருக்கிறார். விமலுக்கும் நிலைமை சுமாராக இருப்பதால், தேவை ஒரு ஹிட் என்ற வெறியோடு பூபதிபாண்டியனுடன் இணைந்துவிட்டார். படத்திற்கு ‘மன்னர் வகையறா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கனவே விமல் தன் சொந்த தயாரிப்பாக இதை ஆரம்பித்து, பின்பு கைமாற்றி விட்டிருக்கிறார். கணக்கு வழக்கு பார்க்கவும் ஒரு வெவரம் வேணுமில்லையா? அதனால்தான் சொந்தப்பட சூட்டை பொறுத்துக் கொள்ள முடியாமல் கை மாற்றினாராம்.
ஜி.வி.பிரகாஷை விட்டுவிட்டு விமலுடன் ஆனந்தி ஜோடி சேர்ந்ததை நல்ல சென்ட்டிமென்ட்டாகவே கருதுகிறது வியாபார வட்டாரமும். அதே நேரத்தில் விமல் தன் படத்தில் நடிக்கும் ஹீரோயின்கள் யாராக இருந்தாலும் அவர்களுடன் மனசார பழகுவார். இதையும் நம்பி இன்டஸ்ட்ரி என்னென்னவோ எழுதும். இந்த முறை அப்படியெல்லாம் நடக்காது என்று நம்புவோம். ஏனென்றால் ஆனந்தி எப்போதும் ஜி.வியின் செல்லம் அல்லவா?
படம் முடிஞ்சதும் ஆனந்திய பத்திரமா ஜி.வி.கிட்ட கொடுத்துருங்கப்பா…