அட… இவரு எப்ப திரும்பவும் வந்தாரு? ரஜினி மன்ற விவகாரத்தில் சத்யநாராயணா கட்டளை!
அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற தலைவராக சத்யநாராயணா இருந்தார். அப்போதெல்லாம் ரஜினியும் சரி, மன்றமும் சரி, செம சுறுசுறு…. ஆனால் அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு அந்த பணியிலிருந்து சத்யநாராயணாவை விடுவிப்பதாக அறிவித்த ரஜினி, அவருக்கு பதிலாக வேறொருவரை நியமித்தார். முக்காலியில முட்டை கோஸ்சை வச்ச மாதிரி எவ்வித அதிரடி செயல்பாடுகளுக்கும் இடம் தராமல் அமைதியாகவே இருந்தார் அந்த புதியவர். எல்லாம் ரஜினியின் ஏற்பாடு. அவர் திறன்னு சொன்னா திறக்கப் போறாரு. இல்லேன்னா கம்முன்னு இருக்கப் போறாரு என்று மக்களும் ஒரு முடிவுக்கு வந்திருந்தார்கள். இப்போது மீண்டும் சத்யநாராயணாவின் குரல் ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. ஓய் சார் ஒய்? (ஃபில் இன் த பிளாங்க்ஸ் வித் சூட்டபுள் கட்டு கதைஸ்)
கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரத்தில் தொடர் போராட்டம் நடத்தி வரும் கூடங்குளம் உதயகுமார், ‘பிஜேபி வலையில் விழ வேண்டாம்’ என்று ரஜினிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அவரது முகப்புத்தகத்தில் எழுதப்பட்டிருந்த அந்த கடிதம் நாளிதழ், மற்றும் ஊடகங்களில் வெளியானது. அதில் ரஜினியின் புகழுக்கு இழுக்கு நேரும் வகையில் ஒரு சில வார்த்தைகளை எழுதியிருந்தாராம் அவர். இதையடுத்து நாகர் கோவில், கன்னியாக்குமரி, துத்துக்குடி பகுதி ரஜினி ரசிகர் மன்றத்தினர் உதயகுமாருக்கு எதிராக போராட்டங்களை முடுக்கிவிட கிளம்பினார்கள். இந்த தகவல் தலைமை மன்றத்தை எட்டியதாம்.
உடனே சம்பந்தப்பட்ட ரசிகர் மன்றத்தை தொடர்பு கொண்ட சத்யநாராயணா, ‘போராட்டம் அது இதுன்னு இறங்கி அந்தாளை (உதயகுமார்) பெரிய ஆளாக்க வேண்டாம்’ என்று உத்தரவிட்டாராம். இதையடுத்து மன்றம் கப்சிப்!
ஆமா… உதயகுமாரு ஏற்கனவே செல்வாக்கான நபர்தானே? அவரை எதுக்கு பெரிய ஆளாக்க வேணாம் என்கிறார் சத்தி?