கொம்பன் ஷோவில் நீதிபதிகள்! பார்க்கவிடாமல் கிருஷ்ணசாமி தொல்லை?
சினிமாவிற்குள் எப்போது அரசியல்வாதிகள் புகுந்தார்களோ, படைப்பாளிகள் பாடு சர்வ நாசம்! ஒவ்வொரு திரைப்படம் வரும்போதும் குறுக்கே விழுந்து தடுப்பதையே தனது வாடிக்கையாக கொண்டிருக்கும் சராசாரி அரசியல்வாதிகள் பட்டியலில் புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும் இடம் பிடித்துவிட்டாரோ என்று அஞ்ச வைக்கிறது அவரது நடவடிக்கைகள். ‘சண்டியர்’ படத்தை கமல் எடுக்க நினைத்தபோதும், முதல் கல்லை எறிந்தவர் கிருஷ்ணசாமிதான். அதற்கப்புறம் அதே பெயரில் வேறு படம் வந்தபோது அவரை ஆளையே காணோம். இப்போது கொம்பன் படத்திற்கும் அவர்தான் சிக்கல் கொடுக்கிறார்.
இந்த தலைப்பும் படத்தின் கருத்தும் (இன்னும் படத்தையே அவர் பார்க்கவில்லை. அதற்குள் இப்படி) தென்மாவட்டங்களில் சாதி கலவரத்தை ஏற்படுத்தும். எனவே படத்தை தடை செய் என்கிறார் அவர். நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை அலசி ஆராய்ந்த நீதிமன்றம் ‘மனுதாரரும் அவர் தரப்பில் மூன்று வக்கீல்களும், படத்தின் தயாரிப்பாளரும் அவர் தரப்பில் மூன்று வக்கீல்களும், ஓய்வுபெற்ற நீதிபதிகள் இருவரும் சேர்ந்து கொம்பன் படத்தை பார்த்து அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படி’ கேட்டுக் கொண்டது.
அதன்படி இன்று காலை 8 மணிக்கு எல்லாரும் படம் பார்ப்பதாக ஏற்பாடு. லேக் ஏரியா போர் பிரேம்ஸ் திரையரங்கத்தில் படம் திரையிடப்பட்டது. படம் துவங்கிய நிமிடத்திலிருந்தே கிருஷ்ணசாமி ஓய்வு பெற்ற நீதிபதிகளை படம் பார்க்க விடாமல் தொந்தரவு கொடுத்து வந்தாராம். திடீரென படத்தை நிறுத்தி ரீவைண்ட் பண்ண சொல்வது. அந்த வசனம் புரியல. மறுபடி காட்டு என்பது. ஸ்கிரிப்ட் புக்கை கொடுத்துட்டு படத்தை போடு என்று என்னெல்லாம் செய்தால் நீதிபதிகள் பொறுமை இழப்பார்களோ, அவ்வளவும் செய்தாராம். அதற்கப்புறம்? யெஸ்… அவர் நினைத்துதான் நடந்திருக்கிறது. நீதிபதிகள் தியேட்டரை விட்டே வெளியேறிவிட்டார்கள்.
இன்று அவர்கள் அறிக்கை சமர்ப்பித்தால்தான் 2 ந் தேதி படம் வெளிவரும். அறிக்கையை சமர்ப்பிக்க விட்டால்தானே? மதிய நிலவரம் என்ன என்பது இனிமேல்தான் தெரியும்.