சந்தானத்திற்கு லெஃப்ட் ரைட்! கே.எஸ்.ரவிகுமார் கோபம்?
கடந்த நான்கு நாட்களாக லிங்கா ரஜினிதான் திரும்பிய இடமெல்லாம் ஸ்டைல் காட்டி சிரித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்த படம் எடுத்துக் கொண்டிருக்கும் கே.எஸ்.ரவிகுமார் தாங்கொணா கோபத்திலிருக்கிறார். பிறகென்ன? பொசுக்கென ஸ்கிரினை விலக்கி ராஜாவை காட்டிவிட்டால் ரசிகர்களுக்கு பெப் இருக்காதல்லவா? லிங்கா படத்தில் ரஜினியின் விதவிதமான ஸ்டில்களை பொருத்தமான நேரத்தில்தான் வெளியிட வேண்டும் என்று காத்திருந்தாராம் கே.எஸ்.ரவிகுமார். ஆனால் படத்தில் நடிக்கும் சந்தானம், தனக்கென்று ஒரு புகைப்பட செட் வாங்கி வைத்திருப்பாரல்லவா? அதிலிருந்து சில முக்கியமான ஸ்டில்களை பிரஸ்சுக்கு வாரி வழங்கிவிட்டார்.
இந்த வாரம் வெளிவந்த இரண்டு முன்னணி வார இதழ்களில் சந்தானமும் ரஜினியும் இருக்கிற ஸ்டில்கள் வெளியிடப்பட்டிருந்தன. அது சந்தானத்தின் தனிப்பட்ட பேட்டி. அதில்தான் இந்த படங்கள் இடைச்செருகலாக இடம் பெற்றிருந்தன. பிரத்யேகமாக சந்தானத்திடம் வழங்கப்பட்ட லிங்கா புகைப்படங்களை படத்தின் இயக்குனர் என்ற முறையில் கே.எஸ்.ரவிகுமாரிடம் அனுமதி பெற்றுதானே வெளியிட வேண்டும்? ஆனால் அதற்கெல்லாம் கவலைப்படாத சந்தானம், இப்படி சுண்டலை போல வாரி வழங்கி விட்டார்.
சம்பந்தப்பட்ட வார இதழ்கள் கடைக்கு வந்த நாளில் தமிழ்சினிமாவின் நாலாபுறங்களில் இருந்தும் சந்தானத்திற்கு பாராட்டுகள் குவிந்தன. அப்படியே கே.எஸ்.ரவிகுமாரும் தன் தனிப்பட்ட ‘அர்ச்சனையை’ அனுப்பி வைத்தாராம் சந்தானத்திற்கு.
இந்த சம்பவத்தை ஒட்டி இன்னொரு விஷயத்தை நினைவுபடுத்தினால், சீனியர்களுக்கு இருக்கிற பொறுப்புணர்வும், ‘சின்னவர்களிடத்தில்’ இருக்கிற ஆர்வ கோளாறும் புரியும். பிரபல நாளிதழ் நிருபர் ஒருவர் லிங்கா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ராதாரவியுடன் பேசிக் கொண்டிருந்தார். பேச்சு லிங்காவை நோக்கி திசை திரும்பியது. நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார் ராதாரவி. ஷுட்டில் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை தனது செல்போனில் வைத்திருந்தாராம். அதையும் நிருபரிடம் காட்டியிருக்கிறார்.
அண்ணே… இதிலேர்ந்து ஒரு ஸ்டில் கொடுங்க. ரஜினி சார் எவ்வளவு இளமையா அழகா இருக்கார்? நாட்டு மக்களுக்கு காட்டிடுவோம் என்று நிருபர் கேட்க, ‘டைரக்டர் அனுமதியில்லாமல் கொடுக்கக்கூடாது’ என்று பதிலளித்தாராம் ராதாரவி. பெரியவங்களுக்கும் சின்னவங்களுக்கும்தான் எவ்வளவு வித்தியாசம்?