கவலைப்பட்ட காக்கா முட்டை! கஷ்டம் போக்கிய இளையராஜா?
எவ்வளவு குப்பையான படத்தையும் கொண்டு போய் இளையராஜாவிடம் போட்டால், அதை பின்னணி இசையாலேயே பிரமிக்க வைப்பார் அவர். குப்பைக்கே அப்படியொரு கிரடிட் தருகிறார் என்றால், பிரமிக்கிற படங்களை கொண்டு போய் போட்டால் என்னாகும்? ஆசைதான்…. ஆனால் யாரோ ஒருவர் இசையமைத்த படத்திற்கு இளையராஜாவிடம் போய் “பின்னணி இசை மட்டும் போட்டுக் கொடுங்க” என்று கேட்கிற தைரியம் எவருக்கு இருக்கிறது? அப்படியொரு சுச்சுவேஷன் வந்துவிட்டது காக்கா முட்டை மணிகண்டனுக்கு.
இவர் இயக்கத்தில் விரைவில் வெளிவரப் போகும் படம் ‘குற்றமும் தண்டனையும்’. விதார்த் ஹீரோவாக நடித்திருக்கும் இந்த படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ்குமார். படத்தை முடித்துவிட்டு ரீரெக்கார்டிங் போகிற நேரத்தில் நிறைய குழப்பம் மணிகண்டனுக்கு. அதுவும் தேசிய விருதெல்லாம் வாங்கிய பின்பு மட்டுமல்ல, உலகப்பட வரிசையில் இடம் பெற்ற காக்கா முட்டை உள்ளுர் தியேட்டர்களில் சக்கை போடு போட்டு வசூலை அள்ளிய பிறகுதான் அச்சமே தலை தூக்கியது அவருக்கு. அடுத்த படத்தையும் அதே நேர்த்தியோடு தர வேண்டும் அல்லவா?
ஜி.வி.பிரகாஷிடம் ஓப்பனாகவே கேட்டுவிட்டாராம். ‘‘உங்களால் இந்த படத்திற்கு பின்னணி இசையை நான் நினைக்கிற மாதிரி அமைச்சு தர முடியும்னு தோணல. நீங்களே ஒரு நல்ல இசையமைப்பாளரை சொல்லுங்க. நான் அவர்ட்ட போறேன்” என்று கேட்க, “நீங்கள் அணுக வேண்டிய ஒரே இடம் இளையராஜாதான். வேற வழியில்ல” என்றாராம் அவர். அப்புறமென்ன? தயங்கி தயங்கி இளையராஜாவிடம் கேட்டேவிட்டார்.
சிறிது நேரம் யோசித்த இளையராஜா, “படத்துக்கு பேரு என்ன சொன்னே?” என்றாராம். ‘குற்றமும் தண்டனையும்’ என்று இவர் சொல்ல, ‘குற்றமே தண்டனை’ன்னு வை என்றாராம் அவர். படத்தின் ஸ்டோரி லைனை இவ்வளவு சிம்பிளாக, அதே நேரத்தில் பளிச்சென்று புரிகிற விதத்தில் சொல்லிவிட்டாரே….? அதனால்தான் அவர் லெஜன்ட் என்று வியந்த மணிகண்டன், “ஆகட்டும்யா” என்றாராம்.
சரி… பைனல் ரிசல்ட்?
குற்றமே தண்டனை படத்திற்கு இளையராஜாதான் பின்னணி இசை!