வேற வழியில்ல… விஷால்தான்! கே.வி.ஆனந்த் முடிவு?
கனா கண்டேன், கோ, அயன் என்று ஏறுமுகத்திலிருந்த கே.வி.ஆனந்த், அதற்கப்புறம் இயக்கிய மாற்றான், அனேகன் படங்களால் சற்றே தலைக்குப்புற கவிழ்ந்ததை பற்றியெல்லாம் அதிகம் விவாதிக்கத் தேவையில்லை. ஏனென்றால் இப்பவும் கூட அவர் படத்தில் நடிக்க “நான் நீ” என்று கோதாவில் குதித்து குஸ்தி போடத் தயாராக இருக்கிறார்கள் ஹீரோக்கள். (இந்த மருவாதி இருக்கிற வரைக்கும் எத்தனை பாடாவதி படங்களுக்கும் லைசென்ஸ் உண்டு அவருக்கு)
‘தனி ஒருவன்’ படத்தின் வெற்றிக்கு முன்பு வரை, ஜெயம் ரவி மீது பெரிய அபிப்ராயம் கொள்ளாத ஏ.ஜி.எஸ் நிறுவனம் அப்படத்தின் வெற்றிக்கு பிறகு, ஆர்யாவை வச்சு படம் எடுக்கறதை விட ஜெயம் ரவியை வச்சு எடுக்கலாமே என்று கே.வி.ஆனந்துக்கு கடிவாளம் போட்டது. அதற்கேற்றார் போல ஜெயம் ரவியும், ‘என்னைய மறந்துடாதீங்க’ என்று ஏ.ஜி.எஸ்சை குடைந்து கொண்டிருந்தார். இந்த நேரத்தில்தான் அந்த பொல்லாத தர்ம சங்கடத்துடன் இன்னொரு சங்கடமும் சேர்ந்து கொண்டது கே.வி.ஆனந்தை. அது அவரே விரும்பியதல்ல. ஏ.ஜி.எஸ் விரும்பியது.
வேறொன்றுமில்லை… நடிகர் சங்க போட்டியில் தலையை நீட்டி தமுக்கடித்துக் கொள்ளாமல் ரகசியமாக விஷாலுக்கு உதவியதில் ஏ.ஜி.எஸ் சின் பங்கு பெரும்பங்கு. அந்த நட்பில் ஏஜிஎஸ், விஷாலுக்காக ஒரு படத்தை தயாரிக்கிற அளவுக்கு தன் தோழமையை வளர்த்துக் கொண்டதாம். ஏன் அந்தப்படம் கே.வி.ஆனந்த் படமாக இருக்கக் கூடாது? என்று தனக்கு தானே கேள்வி கேட்டு, அதற்கு விடையும் தேடிக் கொண்டது.
கே.வி.ஆனந்திடம், “நீங்க விஷாலை வச்சு அந்த படத்தை பண்ணுங்க” என்று கூறிவிட்டதாம். பணத்தை கோடி கோடியாக கொட்டப் போறவங்களே சொன்ன பிறகு, முடியாது என்று கழன்று கொள்ள, ஆனந்த் என்ன ஆப் பாயில் ஆசாமியா? சரிங்க என்று கூறிவிட்டாராம். விஷாலும் சம்மதித்துவிட்டார்.
நடிகர் சங்க தேர்தலில் கடைசி நேரத்தில் கழுத்தறுத்த ஆர்யா, ஜெயம் ரவிக்கு ஏதோ… இவரால் ஆன சிறு ஜெர்க்!